ஆன்மிகம்

மனித வாழ்க்கைக்கு அவசியமான இறைநம்பிக்கை

Published On 2019-02-19 05:42 GMT   |   Update On 2019-02-19 05:42 GMT
தனி மனித நம்பிக்கை மட்டுமின்றி, பிற சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய அளப்பெரிய வாழ்க்கைத் தத்துவங்களையும் இறைநம்பிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இறைநம்பிக்கையை, வெறும் ஆன்மிகமாக இஸ்லாம் சுருக்கி விடவில்லை. அதுபோல, ஆன்மிகம் மட்டுமே இறைநம்பிக்கை என்று கட்டுப்படுத்தவில்லை.

ஒருவரின் வாழ்க்கைக்குத் தேவையான, அனைத்து அடிப்படையான சமூக செயல்திட்டங்களை அமைத்துக் கொடுத்து, இதுதான் இறை நம்பிக்கை என்று கூறுகிறது.

உரிமைகள்-கடமைகள்

இஸ்லாமிய இறைநம்பிக்கை சுயநலம் தாண்டி, சமூக நலனிலும் அக்கறை கொண்டு, பிறருக்கு ஆற்றவேண்டிய உரிமைகளையும், கடமைகளையும் எடுத்துக்காட்டி விளக்குகிறது.

தனி மனித நம்பிக்கை மட்டுமின்றி, பிற சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய அளப்பெரிய வாழ்க்கைத் தத்துவங்களையும் இறைநம்பிக்கை சுட்டிக்காட்டுகிறது.

புனிதமான குடும்ப உறவுகளையும், சமூக உறவுகளையும் கோடிட்டு காட்டி அதை பசுமையாக்குவதற்கு உரிய பசுமை வழியை காட்டுகிறது.

சமூக பொருளாதாரத்தை அக்கறையுடன் பேசுகிறது. அண்டை அயலாளரின் உரிமைகளை விசாலமாக விசாரிக்கிறது. சமூக அரசியலில் ஆர்வம் கொண்டு, நீதியான, நியாயமான ஆட்சி மக்களுக்கு கிடைத்திட பரிந்துரை செய்கிறது.

பொருளாதாரம்

இஸ்லாமிய இறைநம்பிக்கை, பொருளியலின் உயர்ந்த கோட்பாடுகளை உரக்கப் பேசுகிறது. பொருளாதாரம் ஒரே இடத்தில் குவியாமல் இருக்க, அதை பரவலாக்க, ஜகாத், ஸதகா, அழகிய கடன் போன்றவை குறித்து பேசுகிறது. இதன்மூலம் அடித்தட்டு மக்கள் பயன்பெறும் பொருளாதார நலத்திட்டங்களை உலக மக்களுக்கு அர்ப்பணிக்கிறது.

சமூக சேவையின் அவசியத்தையும், சமூக சீர்திருத்தத்தின் பாடத்தையும் சமர்ப்பிக்கிறது. இறைவனுடன் தொடர்பில் இருக்க ஆன்மிகம், சுயகாரியங்களில் சுயமரியாதை, சமூகத்துடன் இணக்கமாக செயல்படுதல், மக்களாட்சிக்கு உகந்த அரசியல் அமைப்பு என பலதரப்பட்ட சமூக நலனையும் இறைநம்பிக்கை வலியுறுத்துகிறது.

70-க்கும் மேற்பட்ட கிளைகள்

‘இறைநம்பிக்கை’ என்ற ஒற்றைச்சொல் எப்படி இத்தனை அம்சங்களையும் வலியுறுத்தும் என்ற கேள்வி எழுவது இயற்கையே. இதை பின்வரும் நபிமொழி மூலம் அறியலாம்.

‘இறைநம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

இறைநம்பிக்கை மூன்று வகைப்படும். அவை: 1) உள்ளம் சார்ந்த இறைநம்பிக்கை, 2) நாவு சார்ந்த இறைநம்பிக்கை, 3) உடல் சார்ந்த இறைநம்பிக்கை. இந்த மூன்று அம்சங்களும் பல்வேறு கிளைகள் கொண்டவை.

உள்ளம் சார்ந்த இறைநம்பிக்கை

முதலில் சொல்லப்படும் உள்ளம் சார்ந்த இறைநம்பிக்கையில் 24 கிளைகள் உள்ளன. அவை:

1) இறைவனை நம்புவது, 2) வானவர்களை நம்புவது, 3) இறை வேதங்களை நம்புவது, 4) இறைத்தூதர்களை நம்புவது, 5) விதியை நம்புவது, 6) மறு உலகை நம்புவது, 7) இறைவனை நேசிப்பது, 8) இறைவனுக்காக ஒருவரை நேசிப்பது, அல்லது வெறுப்பது, 9) முகம்மது நபி (ஸல்) அவர்களை நேசிப்பதும், மதிப்பதும், 10) முகம்மது நபி (ஸல்) வழியைப் பின்பற்றுவது,

11) மனத்தூய்மை, 12) பாவ மன்னிப்புக் கோருவது, 13) இறையச்சம், 14) இறையருளை நம்புவது, 15) நன்றி பாராட்டுவது, 16) வாக்கை காப்பாற்றுவது, 17) பொறுமையை கடைப்பிடிப்பது, 18) விதியின் வினையை ஏற்பது, 19) இறைவனிடம் பொறுப்புச் சாட்டுவது, 20) இரக்க குணம்,

21) பணிவு, 22) தற்பெருமையை கைவிடுவது, 23) பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைக் கைவிடுதல், 24) கோபத்தை அடக்குவது.

இவை அனைத்தும் உள்ளம் சார்ந்த இறைநம்பிக்கையின் கிளைகள் ஆகும்.

நாவு சார்ந்த இறைநம்பிக்கை

அடுத்து குறிப்பிடப்படும், நாவு சார்ந்த இறைநம்பிக்கையில் 8 கிளைகள் உள்ளன. அவை வருமாறு:-

1) ‘லாயிலாஹா இல்லல்லாஹ், முகம்மதுர் ரசூலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை, முகம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதர் ஆவார்) எனும் வார்த்தையை நாவினால் மொழிந்து, உள்ளத்தால் உளப்பூர்வமாக ஏற்பது, 2) திருக்குர்ஆனை ஓதுவது, 3) கல்வி கற்பது, 4) கல்வியை கற்றுக்கொடுப்பது, 5) பிரார்த்தனை புரிவது, 6) இறைவனை தியானிப்பது, 7) வீண் பேச்சுகளை தவிர்ப்பது, 8) ஒவ்வொரு நற்செயலை தொடங்கும்போதும் ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய இறைவனின் திருப்பெயரால் தொடங்குகிறேன்) என்று கூறுவது.

உடல் சார்ந்த இறைநம்பிக்கை

உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் கிளைகள் 38 ஆகும். அவை வருமாறு:-

1) சுத்தமாக இருப்பது, 2) மறைவிடங்களை மறைப்பது, 3) தொழுவது, 4) ஜகாத் (ஆண்டு வருமானத்தில் நூற்றுக்கு இரண்டரை சதவீதம் கடமையான ஏழை வரி) செலுத்துவது, 5) அடிமைகளை விடுதலை செய்வது, 6) உபரியான தர்மம் கொடுப்பது, 7) புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது, 8) புனித உம்ரா (ஹஜ் அல்லாத காலங்களில்) பயணம் மேற்கொள்வது, 9) நோன்பு நோற்பது, 10) புனித கஅபாவை வலம் வருவது,

11) இக்திகாப் (இறை இல்லத்தில் தங்கி) இருப்பது, 12) புனித லைலத்துல் கத்ர் எனும் சிறப்புமிக்க இரவைத் தேடி அடைவது, 13) இறை நம்பிக்கையைக் காக்க ஹிஜ்ரத் (ஊர் துறந்து) செல்வது, 14) நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது, 15) சத்தியங்களில் நேர்மையாக இருப்பது, 16) குற்றப்பரிகாரங்களை நிறைவேற்றுவது, 17) திருமணம் முடிப்பது, 18) குடும்பத்தாரின் உரிமைகளை மதிப்பது, 19) பெற்றோருக்கு நன்மை புரிவது, 20) குழந்தைகளை அழகிய முறையில் வளர்ப்பது,

21) உறவுகளுடன் உறவாடுவது. 22) எஜமானர்கள், அடிமைகளிடம் கனிவுடனும், அடிமைகள் எஜமானர்களிடம் நன்மதிப்புடனும் நடந்து கொள்வது, 23) நீதமான ஆட்சி அமைப்பது, 24) சமூக உறவை பசுமையாக்குவது, 25) பொறுப்பாளர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது, 26) சமாதானம் பேசுவது, 27) நன்மை பயக்கும் காரியங்களுக்கு உதவிபுரிவது, 28) குற்றவியல் தண்டனைகளை நிலை நிறுத்துவது, 29) அறப்போர் புரிவது, 30) நம்பி ஒப்படைக்கப்பட்டதை திருப்பிச்செலுத்துவது,

31) கடனை திருப்பி அடைப்பது, 32) அண்டை அயலாளரிடம் அன்புடன் நடப்பது, 33) நியாயமான வழியில் சம்பாதித்து, நியாயமான முறையில் செலவு செய்வது, 34) ‘ஸலாம்’ எனும் முகமனுக்கு பதில் கூறுவது, 35) தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் இறைவனுக்கே) கூறும் பொழுது, அருகில் இருப்பவர், ‘யர்ஹமுகல்லாஹ்’ (இறைவன் உமக்கு கிருபை புரியட்டும்) என அவருக்கு பதில் கூறுவது, 36) பொதுமக்களுக்கு தொல்லை தராமல் இருப்பது, 37) வீண் கேளிக்கைகளிலிருந்து விலகியிருப்பது, 38) நடைபாதையில் கிடக்கும் கற்களையும், முட்களையும் அகற்றுவது.

இவ்வாறு, இஸ்லாமிய இறைநம்பிக்கை அனைத்து மக்களுக்கும் பயன்தரும் பாதையை நோக்கி பயணிக்கிறது. அதில் இருக்கும் இனிமையான வாழ்க்கைத்தத்துவங்கள் மக்களை நல்வழிப்படுத்துவதோடு, நிம்மதியான, இறைவழியிலான வாழ்க்கையை அவர்கள் வாழ வழிகாட்டுகிறது.

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது மனித வாழ்வின் தன்னம்பிக்கை தூண் ஆகும். அந்த தூண்கள் பலமிக்கதாக அமைந்தால் தான், வாழ்க்கை என்ற கட்டிடம் வலுவாக இருக்கும். அந்த இறைநம்பிக்கைகள் குறித்த தகவல்களை இந்த தொடரில் இனி நாம் தொடர்ந்து காண்போம்.
Tags:    

Similar News