ஆன்மிகம்

இறைவனின் வல்லமையால் படைக்கப்பட்ட ஈஸா நபி

Published On 2018-12-11 04:17 GMT   |   Update On 2018-12-11 04:17 GMT
“நிச்சயமாக அல்லாஹ் தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இது தான் நேரான வழி என்றும் கூறினார்” (திருக்குர்ஆன் 3:51)
திருக்குர்ஆனில் ஆலஇம்ரான் என்ற மூன்றாம் அத்தியாயத்தில் மர்யம் (அலை) அவர்களைப் பற்றியும், ஈஸா (அலை) அவர்களைப் பற்றியும் மிக சுருக்கமாகச் சொன்னாலும் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்ரான்-ஹன்னா வாரிசாக பிறந்தவர் மர்யம் (அலை). ஹன்னா, ஆண் பிள்ளை பெற விரும்பி அல்லாஹ்விடம் நேர்ச்சை செய்தார். அந்த நிகழ்வு குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“இம்ரானுடைய மனைவி (கர்ப்பமான பொழுது ஆண் குழந்தை பெற விரும்பி இறைவனை நோக்கி) ‘என் இறைவனே, நிச்சயமாக நான் என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால், (அதனை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக. நிச்சயமாக நீதான் (பிரார்த் தனைகளை) செவியுறுபவனும், (மனதில் உள்ளவற்றை) நன் கறிபவனாகவும் இருக்கின்றாய்’ என்று (பிரார்த்தித்துக்) கூறினார்”.

“அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது ‘என் இறைவனே, நான் ஒரு பெண்ணையே பெற்றேன்’ என்று கூறினார். ஆயினும் (அவர் விரும்பிய) ஆண், இந்தப் பெண்ணைப் போன்றல்ல என்பதை அல்லாஹ் (தான்) நன்கறிவான். (பிறகு இம்ரானின் மனைவி) நிச்சயமாக நான் அதற்கு ‘மர்யம்’ எனப் பெயரிட்டேன். அதனையும், அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட சைத்தானி(ன் வஞ்சனைகளி)லிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக்கின்றேன்’ என்றார்”. (திருக்குர்ஆன் 3:35,36).

பெண் குழந்தையைப் பெற்றெடுத்த போதும் அன்னை ஹன்னா தான் செய்த நேர்ச்சையை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டினார். அந்த நோக்கத்தின் அடிப்படையில் அந்த பெண் மகவை ‘பைத்துல் முகத்தஸ்’ என்ற ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார். அப்போது அதன் தலைவராக இருந்த ஜக்கரிய்யா நபிகளிடம் மர்யம் (அலை) அவர்கள் ஒப்படைக்கப்பட்டார்.

அக்கால வழக்கப்படி அந்த குழந்தை யார் பராமரிப்பில் விடப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய, எழுதுகோல்களை பெயர் சொல்லி ஆற்றில் வீசி எறிய வேண்டும். யார் பெயர் சொல்லி எறியப்பட்ட எழுதுகோல் எதிர்நீச்சலிட்டு வீசியவரிடமே திரும்பி வருகிறதோ, அவர் அந்தக்குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

அப்படி செய்த போது ஜக்கரிய்யா நபிகளின் பெயர் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் மற்றவர்கள் அதை ஏற்க மறுத்ததால் மீண்டும் இரண்டு முறை எழுதுகோல் ஆற்றில் எறியப்பட்டது. மூன்று முறையும் ஜக்கரிய்யா நபிகளின் பெயருக்கே அனுமதி கிடைத்தது. அதன் அடிப்படையில் மர்யம் (அலை) ஜக்கரிய்யா நபியிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஜக்கரிய்யா நபிகளின் பராமரிப்பில் மர்யம் (அலை) சீரும் சிறப்புமாக வளர்ந்து வாலிபப்பருவத்தை அடையவே, அல்லாஹ் ஈஸா நபியை படைக்க நாடினான். இறை வனின் இந்த கட்டளையை வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மனித உருவில் தோன்றி அன்னை மர்யமிடம் சொன்னார்கள். அதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“மர்யமே, நிச்சயமாக அல்லாஹ் தன் ‘ஆகுக’ என்ற ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு ஒரு குழந்தையை அளிக்க நற்செய்தி கூறுகிறான் என்றும், அதன் பெயர் அல்மஸீஹ் ஈஸா இப்னு மர்யம் என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், இறைவனுக்கு மிக்க நெருங்கிய ஒருவராகவும் இருப்பார்” என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 3:45)

இந்த செய்தி கேட்டு மர்யம் (அலை) அவர்கள் திடுக்கிட்டார். என்னை ஒரு ஆடவனும் தீண்டாதிருக்க எனக்கு எப்படி குழந்தை ஏற்படும். என் கன்னித்தன்மையின் புனிதம் கெட்டதாக போய் விடுமே. மேலும் எனக்கு களங்கமும், அவதூறும் வந்து சேருமே என்று பயந்தார்கள். வானவர் தலைவர் அவருக்கு ஆறுதல் சொன்னார். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“இப்படி தான் அல்லாஹ் தான் நாடியதை படைக்கின்றான். அவன் ஒரு பொருளை படைக்க நாடினால் அதை ஆகுக என அவன் கூறிய உடனே அது ஆகி விடும்” என்று கூறினார்கள் (திருக்குர்ஆன் 3:47).

அல்லாஹ்வின் அருள் வாக்குப்படி, அவன் நாடியபடியே நடந்தது. ஈஸா நபிகளும் பிறந்தார். ஊரார்கள் வசைபாடி தூற்றிய போது, ஈஸா நபிகள், தொட்டில் குழந்தையாக-பிறந்த பாலகனாக இருந்த போதே பேசத் தொடங்கினார்கள். தன் தாயின் புனித தன்மை பற்றி அத்தாட்சி கூறினார்கள்.

பிறந்த பிள்ளை பேசும் அதிசயம் கண்டு, அல்லாஹ்வின் வல்லமையை அறிந்து மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். அல்லாஹ்வும் தன் அருள்மறையிலே ஈஸா நபியின் அதிசயப் பிறப்பை பற்றிச் சொல்லும் போது, ஆதியில் முதல் மனிதனாக ஆதம் (அலை) அவர்களைப் படைக்கும் போது, களிமண்ணால் மனித உருவைச் செய்து அதில் அல்லாஹ்வின் மூச்சுக்காற்றை ஊதி முதல் மனிதனைப் படைத்தான். அதே பாரம்பரியத்தில் ஈஸாவை தகப்பனின்றி படைக்க நாடிய அல்லாஹ் மர்யம் (அலை) அவர்களின் கர்ப்பத்தில் தனது மூச்சுக்காற்றை ஊதினான். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே. அவன் அவரை மண்ணால் உற்பத்தி செய்து மனிதனாக ஆகுக என்று கூறினான், உடனே அப்படி ஆகி விட்டது” (திருக்குர்ஆன் 3:59).

இப்படி ஈஸா நபியைப் படைத்து எல்லா ஞானங்களையும், மூஸா நபிக்கு அருளிய தவ்ராத் வேதத்தின் அறிவையும், அவர்களுக்கென பிரத்யேகமாக இன்ஜீல் என்ற வேதத்தையும் இறைவன் அருளினான்.

ஈஸா நபிகள் தனக்கு அருளிய இன்ஜீல் என்ற வேதத்தை மக்கள் முன் போதித்து, ‘அல்லாஹ் ஒருவன் தான் வணக்கத்திற்குரிய இறைவன், நான் அவனால் அனுப்பப்பட்ட தூதுவன். எனக்கு எந்த இறை சக்தியும் கிடையாது, நான் இறைவனின் மகனும் அல்ல, என்னை நீங்கள் வணங்காதீர்கள். என் போதனைகளைச் செவிமடுத்து அல்லாஹ்வை வணக்கத்திற்குரிய இறைவனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு தூதர். அதற்காக உங்களுக்கு ஓர் அத்தாட்சி கொண்டு வந்திருக்கிறேன். உங்களுக்காக களிமண்ணில்இருந்து பறவை போல் செய்து அதில் நான் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது பறக்கும் பறவையாக ஆகிவிடும். பிறவி குருடனையும், வெண் குஷ்ட ரோகியையும் நான் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மரணித்தோரையும் நான் உயிர்ப்பிப்பேன். நீங்கள் புசித்தவற்றையும் உங்கள் வீட்டில் நீங்கள் சேகரித்து வைத்திருப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன்” என்று சொன்னார். (திருக்குர்ஆன் 3:49)

“நிச்சயமாக அல்லாஹ் தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இது தான் நேரான வழி என்றும் கூறினார்” (திருக்குர்ஆன் 3:51)

இவ்வசனங்கள் நமக்கு சொல்வதெல்லாம் ஈஸா நபிகள் அல்லாஹ்வின் வல்லமையால் படைக்கப்பட்டார்களே தவிர அவர்கள் இறைவனும் அல்ல, இறைவனின் மகனும் அல்ல. அவர் மிக பரிசுத்தமானவர் என்பதைத்தான்.

நான் அல்லாஹ்வின் தூதன் தான். மனிதர்களே, நேர்வழி பெற அல்லாஹ்வையே வணங்குங்கள் என்று அவர் கூறினார். இதன் மூலம் அல்லாஹ் ஏக இறைவன் என்பதை அவர் உண்மைப்படுத்தி இருக்கிறார்.
Tags:    

Similar News