ஆன்மிகம்

பரணி நட்சத்திரக்காரர்களுக்கான பரிகாரங்கள்

Published On 2019-06-08 07:05 GMT   |   Update On 2019-06-08 07:05 GMT
“பரணி நட்சத்திரம்” பற்றியும், இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றியும், அதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
27 நட்சத்திரங்களில் இரண்டாவதாக வரும் நட்சத்திரம் பரணி நட்சத்திரம் ஆகும். பரணி நட்சத்திரத்தின் நவகிரகங்களில் அதிபதியாக சுக்கிர பகவான் இருக்கிறார். செல்வ வளத்திற்கும், சுகத்திற்கும் அதிபதியான சுக்கிரனின் நட்சித்திரமாக இருந்தாலும், பரணி நட்சத்திரக்காரர்கள் அனைவரும் சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என கூறமுடியாது. இவர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கி, வாழ்வில் வளம் பெற கீழ்கண்ட பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்து வந்தால் நிச்சயமான பலன்கள் உண்டாகும்.

சுக்கிரனுக்குரிய நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர தினங்களில் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் கஞ்சனூர் கோவிலுக்கு சென்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதால் உங்களை பீடித்திருக்கும் நட்சத்திர தோஷம் நீங்கும். உங்கள் உறவுகளில் திருமணம் வயதுள்ள பெண்களுக்கு புதுப்புடவை, வாசனை திரவியங்கள் போன்றவற்றை பரிசாக அளிப்பதால் சுக்கிரபகவானின் ஆசிகள் உங்களுக்கு கிடைத்து உங்களின் தோஷங்கள் நீங்கும்.

நீங்கள் எந்த ஒரு காரியத்திற்காகவும் வெளியில் செல்லும் போது சிறிது சர்க்கரை அல்லது இனிப்பை சாப்பிட்டு வெளியே செல்வதால் காரியசித்தி உண்டாகி நன்மையான பலன்கள் உண்டாகும். வெள்ளிக்கிழமைகளில் இளம் பச்சை வண்ண உடைகளை அணிந்து கொள்வது உங்களுக்கு பொருளாதார ரீதியான அதிர்ஷ்ட வாய்ப்புகளை அதிகரிக்கும்.

வசதி உள்ளவர்கள் தரமான வைரத்தை ஒரு வெள்ளி மோதிரத்தில் பதித்து வளர்பிறை வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரை வேளையில் உங்கள் வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும். பிற உயிர்களை துன்புறுத்தாமல் இருப்பதும், நாய்கள், பறவைகளுக்கு உணவளிப்பதும் உங்களின் தோஷங்களை போக்கி நன்மைகள் பலவற்றை ஏற்படுத்தும்.
Tags:    

Similar News