ஆன்மிகம்

கண் திருஷ்டி நீங்கும்... கல்யாணம் கைகூடும் பரிகாரம்

Published On 2019-04-25 09:18 GMT   |   Update On 2019-04-25 09:18 GMT
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிடந்தை தலம் திருமணப் பரிகார திருத்தலமாகத் திகழ்கிறது. இங்கு வந்து மனமுருகி வேண்டுபவர்களின் கண்திருஷ்டி நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்!
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில், சென்னையில் இருந்து சுமார் 42 கி.மீ தொலைவில் உள்ளது திருவிடந்தை. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இந்தத் தலம் திருமணப் பரிகார திருத்தலமாகத் திகழ்கிறது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம் இது!

இந்த தலத்தில் உள்ள தீர்த்தங்களும் விசேஷமானவை. சித்திரை மாதத்தில் கல்யாண தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சேவித்தால் பாவங்கள் அழியும். மார்கழியில் ரங்கநாதர் தீர்த்தத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் நினைத்தது நடக்கும். மாசி மாதம் வராக தீர்த்தத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் மோட்சம் கிட்டும். இது, ஆதிவராகப் பெருமாள், பலி மன்னனுக்கு வழங்கிய அருள்வாக்கு.

இங்கு ஆதிசேஷன் தம்பதி சமேதராக ஆதிவராகரின் திருவடியை தாங்கி சேவை செய்கிறார். ஆகவே, இந்தப் பெருமாளை தரிசித்து வழிபடுபவர்களுக்கு ராகு, கேது தோஷங்கள் நீங்கி, கல்யாண வரம் கைகூடும். உற்ஸவர் நித்ய கல்யாணப் பெருமாள், கோமளவல்லித் தாயார் இருவருக்கும் இயற்கையிலே தாடையில் திருஷ்டிப் பொட்டு இருப்பதால், இங்கு வந்து மனமுருகி வேண்டுபவர்களின் கண்திருஷ்டி நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்!

Tags:    

Similar News