ஆன்மிகம்

புத்திர தோஷம் நீங்கி குழந்தை பேறு கிடைக்க பரிகாரம்

Published On 2019-04-24 08:38 GMT   |   Update On 2019-04-24 08:38 GMT
ஜாதகத்தில் நவகிரகங்கள் ஒரு நபருக்கு குழந்தைப்பேறு தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சூரிய கிரகத்தால் புத்திர தோஷம் ஏற்பட்டு இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.
ஜாதகத்தில் நவகிரகங்கள் ஒரு நபருக்கு குழந்தைப்பேறு தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் சூரிய கிரகத்தால் புத்திர தோஷம் ஏற்பட்டு இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.

சூரிய பகவான் ஒரு ஜாதகரின் தந்தைக்கு உரிய கிரகமாக இருக்கிறார். ஒரு நபரின் ஜாதகத்தில் சூரிய பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டு இருக்குமானால் அந்த ஜாதகர் சென்ற பிறவியில் தனது தந்தைக்கு உணவிடாமல் பட்டினி போட்டு, அவரின் சாபத்தை பெற்று இப்பிறவியில் புத்திர பாக்கியம் அமையாமல் அவதிப்பட நேருகிறது.

உங்களின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்த பின் சூரிய கிரகத்தால் தான் புத்திர பாக்கியம் இல்லாத நிலை உண்டாகியது என்பது உறுதியானால், கீழ்கண்ட பரிகாரத்தை செய்து உங்களின் சூரிய தோஷத்தை போக்கி வெகு விரைவில் குழந்தை பாக்கியத்தை பெறலாம். 100 கிராம் தரமான கோதுமையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த கோதுமையை ஒன்பது பாகங்களாக பிரித்துக் கொண்டு, ஒரு தூய்மையான வெள்ளைத் துணியை எடுத்து, ஒன்பது துண்டுகளாக பிரித்து இந்த ஒன்பது பாக கோதுமையை, அந்த ஒன்பது துண்டுகளாக இருக்கும் துணியில் போட்டு பொட்டலமாக முடிந்து கொள்ள வேண்டும். பிறகு ஒன்பது துணி முடிப்புகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து விட வேண்டும்.

அதில் ஒரு முடிப்பை இரவில் கணவன் – மனைவி இருவரும் தங்கள் படுக்கையில், இருவருக்கும் சேர்த்து ஒரே தலையணைக்கு அடியில் வைத்து விட்டு உறங்க வேண்டும். மறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மனைவி கை, கால், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைத்த அந்த துணி முடிப்பை கையில் வைத்துக் கொண்டு, சூரிய பகவானை மனதில் நினைத்து சூரிய பகவானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் என ஒன்பது முறை மனதார துதித்து வழிபட வேண்டும். இப்படி வழிபட்டு முடிந்ததும் அந்த முடிச்சை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும்.

இதே போல் மீதமுள்ள முடிச்சுகளை வைத்து ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய வேண்டும். பத்தாவது நாள் காலையில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஒன்பது கோதுமை பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு, ஓடும் ஆற்று நீர் அல்லது கண்மாயில் யாரும் பார்க்காதபோது போட்டு விட்டு வர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சூரிய தோஷம் நீங்குகிறது. இந்தப் பரிகாரம் செய்த 45 நாட்களுக்கு பிறகு மனைவி வயிற்றில் கரு உருவாக சூரிய பகவான் அருள்புரிவார்.
Tags:    

Similar News