ஆன்மிகம்

கோபம்.. சாபம்.. தோஷம்..

Published On 2019-01-18 06:01 GMT   |   Update On 2019-01-18 06:01 GMT
ஆற்ற முடியாத அழுகையால், ஆழ் மனதில் இருந்து வந்த வார்த்தை சாபமாக மாறும் போது, அது எப்பேர்பட்ட வலிமையான மனிதனையும் உருத் தெரியாமல் அழித்து விடும்.
ஒரு மனிதன் இந்த பூமியில் பிறப்பதற்கு, அவன் முற்பிறவியிலே செய்த ‘பாவமும், புண்ணியமும்’ தான் காரணம். அதனால் நாம் வாழும் பூமிக்கு ‘தர்ம, கர்ம பூமி’ என்று பெயர்.

ஒரு சிலர் அவர்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து விடுகிறார்கள். ஒரு சிலர் நினைத்ததை திட்டமிட்டு செய்கிறார்கள். ஒரு சிலரோ எவ்வளவு திட்டமிட்டாலும், எவ்வளவு ஆவலுடன் செய்தாலும் நினைத்த விஷயத்தை அடைய முடிவதே இல்லை. இதற்கு எல்லாம் தனது பிறந்த நேரமே காரணம் என்று நடைமுறையிலே சிலர் பேச நாம் கேட்டிருக்கலாம்.

ஜாதகத்திலே 9-வது இடம் தான் ‘உயர்வானதை அடைவது’, அதாவது நாம் இந்த உலகத்தில் வந்து நம் ஆசைகளை அடைகின்ற பகுதி. அந்த 9-வது இடத்திற்கு ஒருவரது ஜாதகத்தில் நல்ல அமைப்பு இருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார்; எண்ணியதையும் அடைந்து விடுகிறார்.

ஒன்பதிலே மோசமான கிரகங்கள் அல்லது பாவ கிரகங்களின் பார்வை இருக்கும்படி பிறந்தவர், தடுமாறுகிறார்; போராடுகிறார்; இலக்கை அடைவதற்கு அதிகமாக கஷ்டப்படுகிறார். ‘எந்த பாவமும் செய்யாத எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என்பது பலருடைய ஆதங்கம். அதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

‘தோஷம்' என்றால் ‘குற்றம் அல்லது குறை’ எனப்படும். ஒருவர் அறிந்தோ, அறியாமலோ செய்யும் வினையின் எதிர்வினை தான் தோஷம். இந்த தோஷம் 2 காரணங்களால் உருவாகுகிறது. அதாவது கோபம், சாபம்.

‘கோபம்’ என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு. இயலாமை, பலவீனத்தின் உச்சம். இதையே வேறு விதமாக சொன்னால் ‘கோபம்’ என்பது பாதிக்கப்பட்டவர் அதற்கு காரணமானவர் மீது வெளிப்படுத்தும் உணர்வு.

‘சாபம்’ என்பது அகங்காரத்தினால் ஒருவர் செய்யும் தீமையினால் பாதிக்கப்பட்டவர், வேதனையுடன் கண்ணீருடன் வெளிப்படுத்தும் எதிர்மறை வார்த்தைகள்.

கோபம் நான்கு வகையாக இருக்கிறது.

1. ஒரு நொடிப்பொழுதில் தோன்றி மறைந்து விடும்.
2. 2 நாழிகை, அதாவது 48 மணி நேரம் நீடிக்கும்.
3. கோபம் - ஒரு நாள் முழுவதும் நீடிக்கும்.
4. கோபம், அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்து, பகையை உள்ளுக்குள் வளர்த்து விடும்.

கோபத்தில் இருந்து அவதூறு, வன்செயல், தீய எண்ணம், பொறாமை, வருத்தம், பொருட்களை அழித்தல், சுடுசொற்கள், தாக்குதல் போன்ற 8 தீய குணங்கள் தோன்றுகின்றன.

ஜோதிட சாஸ்திரத்தில் கோபத்தின் வெளிப்பாடாக நாம் கூறும் கிரகங்கள் சூரியன், செவ்வாய், சனி. 1-ல் சூரியன் சுட்டெரிக்கும் கோபம். நியாயமான செயலுக்கு மட்டுமே வரும். நம் ஆத்ம காரன் சூரிய பகவானே. 1-ல் செவ்வாய் அடக்க முடியாத ஆணவம் நிறைந்த கோபம். நம் உடலின் ரத்த ஓட்டத்திற்கு ஆதாரமாக இருப்பவர் செவ்வாய். 1-ல் சனி இருப்பது நியாயத்தை நிலை நாட்டும் கோபம். நம் கர்ம காரகன் சனி பகவான். அதனால் தான் அவர் துலாத்தில் உச்சம் அடைகிறார்.



சனி, செவ்வாய் இருவரும் ராகு-கேது, மாந்தியுடன் ஏற்படும் இணைவு சாபத்தை ஏற்படுத்துகிறது. திரிகோணாதிபதிகளுடன் தொடர்பு பெறும் கோபமும், சாபமும், ஜாதகருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. மறைவு ஸ்தானாதிபதிகளுடன் தொடர்பு பெறும் கோபமும் சாபமும் ஜாதகரால் மீள முடியாத தாக்கத்தை உருவாக்கும்.

எத்தகைய தோஷமானாலும் விமோசனம் உண்டா? இல்லையா? என்பதே கேள்வி. நியாயமான சாபம் பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு, மீள முடியாத விளைவை தருகிறது. ‘ஆறுவது சினம்’ என்ற அவ்வை பாட்டியின் கூற்றிற்கு ஏற்ப, கோபத்தினால் ஏற்பட்ட தோஷத்திற்கு வடிகால் உண்டு. சாபத்தினால் ஏற்பட்ட தோஷத்திற்கு விமோசனம் கிடைப்பது எளிதல்ல.

கண்ணுக்கு தெரிந்த, தெரியாத பல்வேறு தோஷங்கள் இருந்தாலும், பிரதானமாக ஜாதகத்திலும், பிரசன்னத்திலும் 21 வகையான தோஷங்கள் கண்டறியப்படுகின்றன.

காற்றை மாசு படுத்துதல், சுத்தமான காற்றைத் தரும் விருட்சங்களை அழித்தல், மழை நீர் பூமியில் புக முடியாமல் கழிவு பொருட்களை பயன்படுத்தி பூமியை மாசு படுத்துவது, நீர் நிலைகளை அழித்து குடியிருப்பு பகுதியாக்குவது போன்ற இயற்கை பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு இயற்கை நிச்சயம் பதிலடி கொடுக்கும்.

புனித யாத்திரை செல்லும் பயணிகள் புண்ணிய புனித தீர்த்தங்களில் தங்கள் உடைகளை விடுவது, சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி நீர்நிலையை அசுத்தம் செய்வதும் நிச்சயம் கர்மவினையைத் தரும். வினைப்பயனை குறைக்க தவறான வழிமுறையை பயன்படுத்தினால், அது கூடுதல் வினையை சேர்த்த பலனையே கொடுக்கும்.

பசுவதை செய்பவர்களுக்கு ‘கோ சாபம்’ ஏற்படும். பறவைகளை கூண்டில் அடைத்து வேடிக்கை பார்ப்பவர் களுக்கு ‘பட்சி சாபம்’ ஏற்படும். சக மனிதனின் கோப சாபத்தை விட, இயற்கை விடும் சாபத்திற்கும், ஐந்தறிவு ஜீவன் விடும் சாபத்திற்கும் வலிமை அதிகம்.

ஒரு உயிர் தாயின் கருவறையில் உருவாகி, இடுகாடு செல்வது வரை அனைத்து நிகழ்வுகளும் பிரபஞ்சத்தின் விருப்பப்படியே நடக்கிறது என்பது உலகறிந்த உண்மை. இந்த உலகம் பிரபஞ்சத்தால் கட்டுப்படுத்தப்படுவதால் தான் இறந்தவருக்கு உயிர் கொடுக்க முடியவில்லை.

சக மனிதருக்குள் உருவாகும் கோபமும் சாபமுமே மறு பிறவி. கோபமும் சாபமும் இல்லை என்றால் மறுபிறவி என்பதே என்ற ஒன்று கிடையாது. கோபத்தையும் சாபத்தையும் உருவாக்கியவனும், உருவாகச் செய்தவனும் பிறவி எடுத்து தங்கள் கோபத்தையும், சாபத்தையும் தீர்த்துக் கொள்ளும் போதே அந்த தோஷம் நிவர்த்தி ஆகிறது.

எவ்வளவு பூஜை செய்தாலும், வரம் பெற்றாலும், மாந்த்ரீகம் செய்தாலும் ஒரு நல்லவரை அழிக்க முடியாது. ஆனால் ஆற்ற முடியாத அழுகையால், ஆழ் மனதில் இருந்து வந்த வார்த்தை சாபமாக மாறும் போது, அது எப்பேர்பட்ட வலிமையான மனிதனையும் உருத் தெரியாமல் அழித்து விடும்.

- பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி.
Tags:    

Similar News