சினிமா
எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்த `மான்ஸ்டர்' படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், பிரியா பவானி சங்கர் பெயரில் முளைத்திருக்கும் போலி ட்விட்டர் கணக்கால் அவர் கோபமடைந்து உள்ளார்.
`மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். கார்த்தியின் `கடைக்குட்டி சிங்கம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக இவர் நடித்த `மான்ஸ்டர்' படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ட்விட்டரில் பிரியா பவானி சங்கரின் பெயரில் செயல்படும் போலி கணக்கு ஒன்றில், “மான்ஸ்டர் படம் அனைவருக்கும் பிடித்து இருப்பதாக நம்புகிறேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி” என்று பிரியா பவானி சங்கர் கூறுவதுபோல் கருத்து பதிவாகி உள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியா பவானி சங்கர், அந்த ட்விட்டை குறிப்பிட்டு “போலி கணக்கு தொடங்கிய உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது. எனக்கு தொல்லை கொடுப்பதையே வேலையாக வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.
Dear fake profile! I understand your excitement and responsibility in posting something. But pls don’t make it as your duty to embarrass me in an hourly basis. Thanks but no thanks 🙏🏼 https://t.co/teO1K1VC6w
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 20, 2019
சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் நடிகர், நடிகைகளின் பெயரில் பல போலி கணக்குகள் முளைத்து வருகின்றன. அதில் குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் பேசுவதுபோலவே கருத்துகளை பதிவிடுகிறார்கள். அதை உண்மை என்று நம்பி ரசிகர்களும் பின்தொடர்கிறார்கள். இதனால் குறிப்பிட்ட பிரபலங்கள் சர்ச்சைகளில் சிக்கி எதிர்ப்புக்கு உள்ளாவதும், அதன்பிறகு விளக்கம் அளிப்பதும் தொடர்ந்து வருகிறது.