சினிமா
வெளிநாட்டவர் என்று விமர்சித்தவர்களுக்கு தீபிகா படுகோனே பதிலடி
பாலிவுட்டில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே டென்மார்க் நாட்டை சேர்ந்தவர் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தீபிகா விளக்கம் அளித்துள்ளார். #DeepikaPadukone
இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் இந்தியர் அல்ல டென்மார்க் நாட்டை சேர்ந்தவர். டென்மார்க் பாஸ்போர்ட் தான் வைத்துள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்தன.
தீபிகாவின் பெற்றோர்கள் பிரகாஷ் மற்றும் உஜ்ஜாலா படுகோனே இருவரும் டென்மார்க்கில் வசிக்கும்போது தான் தீபிகா பிறந்துள்ளார். ஆனால் தீபிகா பிறந்த சில மாதங்களிலேயே குடும்பத்தினர் பெங்களுருக்கு புலம் பெயர்ந்துவிட்டனர்.
தீபிகா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘நான் இந்தியா பாஸ்போர்ட் தான் வைத்துள்ளேன். ஒரு இந்தியக் குடிமகன் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை’ என்று முன்பே விளக்கம் அளித்தார்.
ஆனாலும் அவர் மீது தொடர்ந்து வெளிநாட்டவர் சாயம் பூசப்பட்டது.
இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நேற்று நடந்த நான்காம் கட்ட வாக்குப்பதிவின் போது தான் இந்திய குடிமகன் என்பதற்கு அடையாளமாக தனது ஜனநாயக கடமையாக வாக்குப்பதிவு செய்தார்.
வாக்குப்பதிவு செய்த பின்பு விரலில் மையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ’நான் யார் அல்லது நான் எங்கே இருக்கிறேன் என்பது பற்றி என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. என்னைப் பற்றி பேசிவந்தவர்களுக்கு இனி அந்த சந்தேகம் வேண்டாம். இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். ஜெய்ஹிந்த்’ என்று கூறி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். #DeepikaPadukone