சினிமா
சர்க்கஸ் கலைஞர்கள் மனவலிமையால் வெற்றி பெறுகின்றனர் - சுவேதா திரிபாதி பேட்டி
சரவணன் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மெஹந்தி சர்க்கஸ் படத்திற்காக சர்க்கஸ் பயிற்சி பெற்ற சுவேதா திரிபாதி, சர்க்கஸ் கலைஞர்கள் மனவலிமையால் வெற்றி பெறுகின்றனர் என்று கூறினார். #MehandiCircus #ShwetaTripathi
பாலிவுட் நடிகையான சுவேதா திரிபாதி தனது முதல் தமிழ் படமான மெஹந்தி சர்க்கசுக்காக உண்மையான சர்க்கஸ் கலைஞர்களிடம் பயிற்சி பெற்று இருக்கிறார்.
ராஜு முருகன் கதை, வசனத்தில் சரவணன் ராஜேந்திரன் இயக்கத்தில் காதல் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் ஒரு சர்க்கஸ் கலைஞராக சுவேதா திரிபாதி நடிக்கிறார். இதுகுறித்து சுவேதா திரிபாதி பேசும்போது, “இது என்னுடைய முதல் தமிழ் படம் என்பதால் நான் மிகவும் ஆவலாக உள்ளேன்.
உண்மையான சர்க்கஸ் கலைஞர்களிடம் பயிற்சி பெற்றது சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. சர்க்கஸ் கலை என்பது எளிதானது அல்ல என்பதை புத்தகங்கள் மூலமாகவும், சர்க்கஸ் நிகழ்ச்சிகள் மூலமாகவும் நான் முன்பே தெரிந்துகொண்டேன். இருந்தாலும், அவர்களுடன் நேரம் செலவிடும்போதுதான் அவர்களின் உழைப்பு பற்றி அறிந்து கொண்டேன். அவர்கள் எப்படி வாழ்வுக்கும், சாவுக்கும் நடுவே முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.
சர்வதேச சர்க்கஸ் கலைஞர்களிடம் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் நம் நாட்டு கலைஞர்களுக்கு இல்லை. அவர்களது மன வலிமையாலேயே அவர்கள் வெற்றி பெறுகின்றனர். படத்திற்காக ராஜா சர்க்கஸ் நிறுவனத்திடம் சின்னமனூரிலும், மதுரையிலும் பயிற்சி பெற்றேன். நடப்பது, தலைவணங்குவது போன்றவற்றை பயிற்சி செய்தேன். கத்தியை தூக்கி எறிவது எப்படி என்றும் கற்றுக் கொண்டேன்.
1990-களில் நடக்கும் ஒரு காதல் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் இது. கொடைக்கானலுக்கு சர்க்கஸ் குழுவினர் பயணிக்கும்போது, குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கொடைக்கானலைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் இடையே காதல் மலர்கிறது. இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமே மெஹந்தி சர்க்கஸ்” என்று தெரிவித்துள்ளார். #MehandiCircus #ShwetaTripathi #SaravanaRajendran #MadhampattyRangaraj