ஆட்டோமொபைல்
சக்தி வாயந்த என்ஜினுடன் களமிறங்கும் சுசுகி ஜிக்சர் 250
சுசுகி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் மோட்டார்சைக்கிளின் என்ஜின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள சுசுகி நிறுவனத்தின் புதிய வரவாக ஜிக்சர் 250 சந்தைக்கு வர இருக்கிறது. இப்புதிய மாடல் மோட்டார்சைக்கிளை இம்மாதம் 20-ந் தேதி இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஆண்டின் மிகப் பெரிய, மறக்கமுடியாத அறிமுகமாக ஜிக்சர் 250 இருக்கும் என்று நிறுவனம் உறுதிபட நம்புகிறது.
இந்நிறுவனம் மிகப் பெரிய எழுச்சியை பார்த்து ரசிக்க தயாராகுங்கள் என்கிற ரீதியில் விளம்பர வாசகம் மூலம் வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக புதிய மோட்டார்சைக்கிளை சுசுகி அறிமுகம் செய்யப் போகிறது என்ற செய்திகள் பரவலாக வெளிவந்துள்ளன.
ஆனால் கடந்த ஆண்டுதான் 250 சி.சி. பிரிவில் ஒரு மோட்டார்சைக்கிளை இந்நிறுவனம் அறிமுகம் செய்யப் போவது உறுதியானது. இந்தியாவில் சுசுகி தயாரிப்புகளில் ஜிக்சர் பிராண்ட் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதனால் இந்தியாவில் ஜிக்சர் 250 என்ற பெயரில் இதை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உறுதியான மோட்டார்சைக்கிளுக்குரிய அனைத்து வடிவமைப்புகளும் கொண்டதாக இது உள்ளது. இதில் 249 சி.சி., சிங்கிள் சிலிண்டர் என்ஜினைக் வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த என்ஜின் 26.5 பி.எஸ் மற்றும் 22.6 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
4-வால்வ் கொண்ட இந்த என்ஜின் 6 கியர்களை உடையதாகவும் இது பி.எஸ்.6 புகைவிதிகளுக்கு உட்பட்டு இருக்கும். யமஹா பேஸர் மாடலுக்கு போட்டியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.1.35 லட்சம் முதல் ரூ.1.45 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.