search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டயானா மரணம் - மவுனம் கலைத்தார் இளவரசர் வில்லியம்
    X

    டயானா மரணம் - மவுனம் கலைத்தார் இளவரசர் வில்லியம்

    என் அம்மா டயானா இறந்தபோது பிற எந்த வலியை விடவும் கொடிய மன வலியை அனுபவித்தேன் என இளவரசர் வில்லியம் மனம் திறந்து பேசி உள்ளார்.
    லண்டன்:

    இங்கிலாந்து இளவரசி டயானா, தனது 36-வது வயதில் 1997-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஒட்டு மொத்த மனித குலத்தின் அன்பை ஒருசேரப் பெற்றிருந்த அவரது மரணம், உலக வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்தது.

    இளவரசர் சார்லஸ்சை பிரிந்து வாழ்ந்த நிலையில் அவர் இறந்தது பல்வேறு சர்ச்சைகளை அப்போது கிளப்பியது. சார்லஸ்-டயானா தம்பதியின் மகன்களான இளவரசர்கள் வில்லியமும், ஹாரியும் தங்கள் தாயின் மரணம் குறித்து வெளிப்படையாக பேசியது இல்லை.

    இந்த நிலையில் தற்போது பி.பி.சி. டி.வி. தயாரித்துள்ள மனநலம் பற்றிய ஆவணப்படத்தில் இளவரசர் வில்லியம் மனம் திறந்து பேசி உள்ளார்.

    அதில் அவர், “என் அம்மா டயானா இறந்தபோது பிற எந்த வலியை விடவும் கொடிய மன வலியை அனுபவித்தேன். கடினமான தருணங்களில் இங்கிலாந்து மரபுப்படி வாய் திறந்து பேசுவதில்லை. சற்று அதில் இருந்து வெளியே வர வேண்டும் அல்லவா? நாம் ஒன்றும் ரோபோக்கள் இல்லை. வாய் திறந்து நமது உணர்வுகளை சொல்லித்தானே ஆகவேண்டியது இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், “இதுபற்றி நான் நிறைய யோசித்துப் பார்த்து இருக்கிறேன். நான் ஏன் அப்படி உணர்ந்தேன் என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் மிக இளம் வயதில் நாம் இருக்கிறபோது, நமது அன்புக்குரியவர்கள் மரணத்தை தழுவினால் அடைகிற மன வலி பிற வலிகளைப்போல இல்லை.” என்றார்.

    மேலும், தான் ஆம்புலன்ஸ் விமானத்தில் விமானியாக இருந்தது பற்றியும் குறிப்பிட்ட அவர், “மரணம் என்பது நமது அருகே இருக்கிறது என்று உணர்ந்துள்ளேன்” என்று சொன்னார்.

    இந்த ஆவணப்படம் பி.பி.சி. டி.வி. சேனலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பு ஆகிறது.
    Next Story
    ×