search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் கொரிய அதிபரை அடுத்த மாதம் சந்திக்கிறார் டிரம்ப்
    X

    தென் கொரிய அதிபரை அடுத்த மாதம் சந்திக்கிறார் டிரம்ப்

    அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜூன் மாதம் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    வாஷிங்டன்:

    ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக சோதனை செய்து, சர்வதேச நாடுகளை கலங்கடித்து வந்தது வடகொரியா.

    உலக நாடுகள் இதனை வன்மையாக கண்டித்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் வார்த்தைகளால் யுத்தம் நடத்தினர்.

    இந்த சூழலில் தென்கொரியாவில் நடந்த குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் வடகொரியா-தென்கொரியா இடையே அமைதியை ஏற்படுத்த வழிவகை செய்தது. இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசி கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டினர்.



    அதனை தொடர்ந்து தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், அமெரிக்கா-வடகொரியா இடையே சமாதானத்தை ஏற்படுத்தம் முயற்சிகளை முன்னெடுத்தார். இதன் பயனாக உலகின் இரு எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர்.

    பதற்றம் தணிந்து தீபகற்பத்தில் சுமூக தீவு காணப்படும் என நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் வடகொரியா அணுகுண்டுடன் கூடிய அதிநவீன ஆயுதம் ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி சோதித்தது. 

    எனினும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆயுதம் அணு ஆயுத வகையை சேர்ந்ததா அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரகத்தை சார்ந்ததா என்பது பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அதே சமயம் இது ஒரு குறுகிய தொலைவிலான ஆயுதம் என வடகொரியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற பேச்சுவார்த்தைகள் நடந்துவந்த நிலையில் வடகொரியா புதிய ஆயுத சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜூன் மாதம் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்திக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜூன் மாதம் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்திக்க உள்ளார். 

    இதையடுத்து ஜூன் மாதத்தின் இறுதியில் நடைபெறும் ஜி20 உலக மாநாட்டில் டிரம்ப் கலந்துக் கொள்ள உள்ளார்.  இந்த சந்திப்பின் மூலம் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக அதிகாரப்பூர்வமான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
    Next Story
    ×