search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோமரோஸ் நாட்டின் ஜனாதிபதியாக அஜாலி அசோமணி மீண்டும் தேர்வு
    X

    கோமரோஸ் நாட்டின் ஜனாதிபதியாக அஜாலி அசோமணி மீண்டும் தேர்வு

    எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் கோமரோஸ் நாட்டில் நடைபெற்ற தேர்தலில், ஜனாதிபதி அஜாலி அசோமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #ComorosElection #ComorosPresident
    மொரோனி:

    இந்திய பெருங்கடலில், ஆப்பிரிக்காவின் கிழக்கு கரையில் வடக்கு மடகாஸ்கருக்கும், வடகிழக்கு  மொசாம்பிக்கிற்கும் இடையில் உள்ள தீவு நாடு கோமரோஸ். இந்த நாட்டின் ஜனாதிபதி அஜாலி அசோமணி, கடந்த ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தில் திடீரென ஒரு மாற்றம் கொண்டு வந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அஜாலி அசோமணியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே முன்கூட்டியே, அதாவது 2019 மார்ச் மாதம் தேர்தல் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    2019ல் நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்று 2029ம் ஆண்டு வரை பதவியில் நீடிக்கும் வகையில் அஜாரி, சட்டத்தை மாற்றியிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். நாடு முழுவதும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களுக்கு மத்தியில் தேர்தல் பணிகள் நடைபெற்றன.

    ஜனாதிபதி பதவிக்கு அஜாலி மீண்டும் போட்டியிட்டார். இந்த தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலேவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் 6 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது.



    வன்முறை போராட்டங்கள், வேட்பாளர்கள் மீது தாக்குதல், எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கைது போன்ற பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் அஜாலி அசோமணி 60.77 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மகமூது அகமதா 14.62 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதர 11 வேட்பாளர்களும் மிகவும் குறைந்த அளவிலான வாக்குகளே பெற்றனர்.

    இந்த தேர்தல் முடிவினை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. #ComorosElection #ComorosPresident

    Next Story
    ×