search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய்லாந்து பொதுத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
    X

    தாய்லாந்து பொதுத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

    ராணுவ ஆட்சி நடைபெறுகிற தாய்லாந்து பொதுத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. #ThailandElection
    பாங்காக்:

    தாய்லாந்தில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் அங்கு ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவம் அரியணை ஏறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அப்படி கடந்த 90 ஆண்டுகளில் 12 முறை ஆட்சி கவிழ்க்கப்பட்டு உள்ளது.

    அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரது பதவியை பறித்து அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட்டு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நிவாட்டம்ராங் பூன்சாங் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் வலுவான தலைமை இல்லாததால் அந்நாட்டின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்பேற்றார்.

    நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், இதுவரை அங்கு ஜனநாயக ஆட்சி மலரவே இல்லை.

    இந்த சூழலில் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் உத்தரவு பிறப்பித்தன் பேரில், மார்ச் மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. தாய்லாந்து அரச குடும்பத்தினர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் பெரும்பாலும் அரசியல் விவகாரங்களில் தலையிடுவது கிடையாது.

    ஆனால் எதிர்பாராத வகையில் மன்னர் மகா வஜ்ரலோங்கோனின் சகோதரியும், இளவரசியுமான உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார். எனினும் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் உப்லோரட்டனா மஹிடோல் தனது முடிவில் இருந்து பின் வாங்கினார்.

    இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், 500 உறுப்பினர்களை கொண்ட தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பள்ளிக்கூட வளாகங்கள், கோவில்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் அமைக் கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். பொதுவான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா, முன்னாள் பிரதமர் தாக்‌ஷின் ஷினவத்ராவின் பெகு தாய் கட்சியின் சார்பில் களம் இறங்கி உள்ள சூடாரத் கீரப்பான் ஆகியோர் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மன்னர் மகா வஜ்ரலோங்கோன் மக்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    அதில் அவர் தனது தந்தையும், முன்னாள் மன்னருமான பூமிபோல் அதுல்யாதேஜ் கூறிய “அரசுக்கும் சமூகத்துக்கும் நல்லது செய்யக்கூடிய மற்றும் கெட்டவர்களை கட்டுப்படுத்தும் ஆளுமை கொண்ட நல்ல மனிதர்களை ஆதரியுங்கள்” என்கிற வாசகத்தை சுட்டிக்காட்டி “இதை நினைவில் வைத்து விழிப்புடன் செயல்படுங்கள்” என தெரிவித்திருந்தார். மன்னரின் இந்த அறிக்கை செய்தி சேனல்களில் தொடர்ச்சியாக காட்டப்பட்டுக்கொண்டே இருந்தன.
    Next Story
    ×