search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்றார்
    X

    அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்றார்

    அமெரிக்காவின் கொலம்பியா மாவட்டத்தின் மேல்முறையீடு நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியோமி ராவ் பதவி ஏற்றார். #NeomiRao #IndianAmericanWoman #DCCourtJudge
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மாநில நீதிமன்றங்களும் மாவட்ட நீதிமன்றங்களும் தனிதனியாக இயங்கி வருகின்றன. இவ்விரு நீதிமன்றங்களிலும் வழங்கப்படும் தீர்ப்புகள் தொடர்பாக மேல் முறையீடு செய்ய மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் தனி நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டுக்கு அடுத்தப்படியாக மிகுந்த அதிகாரம் கொண்ட நீதிமன்றங்களாக மேல்முறையீடு நீதிமன்றங்கள் இங்கு உள்ளன.

    இந்நிலையில் கொலம்பியா மாவட்ட மேல் முறையீடு, நீதின்மன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான நியோமி ராவ் என்பவரின் பெயரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முன் மொழிந்திருந்தார். இந்த நியமனத்துக்கு செனட் சபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.



    இதைத்தொடர்ந்து கொலம்பியா மாவட்டத்தின் மேல்முறையீடு நீதிமன்ற  நீதிபதியாக நியோமி ராவ் நேற்று வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி பிரட் கவானா பதவி பிரமானம் செய்து வைத்தார்.

    இந்தியாவைச் சேர்ந்த ஜெரின் ராவ் - ஜெஹாங்கீர் நரியோஷாங் தம்பதியரின் மகளாக அமெரிக்காவின் டெட்ராய் மாநிலத்தில் பிறந்த நியோமி ராவ் (45) ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின் சட்டப்பள்ளியில் அரசியலமைப்பு , நிர்வாகம் ஆகிய துறைகளின் சட்டப்பேராசிரியையாக பணியாற்றினார். பாராளுமன்றத்தின் நம்பகத்தன்மை மற்றும் அரசியலமைப்பு தொடர்பாக சட்டப்பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார்.

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் சக்தி வாய்ந்த மாவட்ட மேல்முறையீடு நீதிமன்ற நீதிபதியாக முன்னர் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அடுத்தப்படியாக அதிகாரம் மிக்க இந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது இந்திய வம்சாவளி நபர் நியோமி ராவ் என்பது குறிப்பிடத்தக்கது. #NeomiRao #IndianAmericanWoman #DCCourtJudge

    Next Story
    ×