search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மசூதி தாக்குதல் எதிரொலி - நியூசிலாந்தில் துப்பாக்கி வைத்திருக்க கடும் கட்டுப்பாடு
    X

    மசூதி தாக்குதல் எதிரொலி - நியூசிலாந்தில் துப்பாக்கி வைத்திருக்க கடும் கட்டுப்பாடு

    மசூதிகளில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நியூசிலாந்தில் மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. #MosqueShooting #NewZealandShooting
    வெலிங்டன்:

    நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல்தான் என்பதை அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா உறுதி செய்தார்.

    துப்பாக்கிச்சூடு நடத்தி, அந்த கொடூர காட்சிகளை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் (வயது 25) கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். அவன் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்த நீதிபதி, அவனை அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.



    நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் பகுதியளவு தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நாட்டில் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, துப்பாக்கி வாங்குவது மற்றும் வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

    இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் ஜெசிந்தா தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட முடிவெடுக்கப்பட்டது. இந்த தகவலை பிரதமர் ஜெசிந்தா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அதே சமயம் எந்த மாதிரியான திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

    இந்த நிலையில், மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு வீடியோவை சமூக வலைத்தளங்களில் நேரலையில் பரப்பிய குற்றச்சாட்டில் 18 வயது வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். துப்பாக்கிச்சூடு வீடியோவை பரப்பியது மற்றும் வன்முறையை தூண்டும் வகையிலான வாசகங்களுடன் மசூதியின் புகைப்படங்களை வெளியிட்டது என 2 குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அந்த வாலிபருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, அடுத்த மாதம் 8-ந் தேதி மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

    இதற்கிடையில், நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக அண்டை நாடான ஆஸ்திரேலியாவில் உள்ள புனித தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    நாடு முழுவதும் உள்ள மத பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றில் அதிக கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, தடுப்பு வேலிகள் அமைப்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 55 மில்லியன் (சுமார் ரூ.377 கோடி) டாலர் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். #MosqueShooting #NewZealandShooting 
    Next Story
    ×