search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலம்பிய எல்லையில் உள்ள 3 பாலங்களை மூடுகிறது வெனிசுலா- உதவிப் பொருட்கள் வருவதில் சிக்கல்
    X

    கொலம்பிய எல்லையில் உள்ள 3 பாலங்களை மூடுகிறது வெனிசுலா- உதவிப் பொருட்கள் வருவதில் சிக்கல்

    வெனிசுலாவில் அரசின் தடையை மீறி உதவிப் பொருட்களை கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ள நிலையில், கொலம்பிய எல்லையில் உள்ள 3 பாலங்களை மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #VenezuelaCrisis #JuanGuaido #VenezuelaVicePresident
    கராகஸ்:

    வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிக்கிறது. உணவுப் பொருள் உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ தன்னை நாட்டின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டதால் அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

    ஜூவான் குவைடோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 50 நாடுகள் ஆதரவு தெரிவித்து அங்கீகரித்ததால், அந்த நாடுகளுடன் அதிபர் நிகோலஸ் மதுரோ மோதல் போக்கை கையாண்டு வருகிறார். ஆட்சியைக் கவிழ்க்க அந்த நாடுகள் முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    இதற்கிடையில் ஜூவான் குவைடோ கேட்டுக்கொண்டதன் பேரில் அமெரிக்கா போன்ற நாடுகள் வெனிசுலா மக்களுக்கு தேவையான உதவிப் பொருட்களை வழங்க முன்வந்தன. ஆனால் இந்த உதவிகளை மதுரோ ஏற்க மறுத்துவருகிறார். உதவிப் பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் பிரேசில் எல்லையை மூடினார். ஐநா மூலம் வரக்கூடிய உதவிகளை மட்டும் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

    இதற்கிடையே மதுரோ தலைமையிலான அரசின் தடையை மீறி, நேற்று அண்டை நாடான கொலம்பியா சென்ற குவைடோ, அங்கு நிதி மற்றும் உதவிப்பொருட்கள் சேகரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் கொலம்பிய அதிபர் இவான் டக்கும் கலந்துகொண்டார். அங்கிருந்து இன்று உதவிப் பொருட்களை வெனிசுலாவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.



    தடையை மீறி கொலம்பியாவுக்கு சென்றதால் அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அத்துடன் கொலம்பியாவையும் வெனிசுலாவையும் இணைக்கும் மூன்று பாலங்களையும் தற்காலிகமாக மூட அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக துணை அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் தெரிவித்தார். கொலம்பியா அரசிடம் இருந்து, வெனிசுலாவின் அமைதி மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வருவதால் மூன்று பாலங்களையும் மூடுவதாக அவர் கூறியுள்ளார்.

    எதிர்க்கட்சியால் திரட்டப்பட்ட உதவிப்பொருட்கள் மற்றும் அமெரிக்காவின் உதவிப் பொருட்களை வெனிசுலாவுக்கு கொண்டு வர உள்ள நிலையில், பாலங்கள் மூடப்படுவதால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. உதவிப் பொருட்கள் மக்களை சென்று சேருவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

    வெனிசுலா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசர் ஜான் போல்டன், தனது தென் கொரிய பயணத்தை ரத்து செய்துள்ளார்.  #VenezuelaCrisis #JuanGuaido #VenezuelaVicePresident
    Next Story
    ×