search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரசல்ஸ் நகரில் இருந்து சொந்த கட்சி எம்.பி.க்களுக்கு தெரசா மே உருக்கமான கடிதம்
    X

    பிரசல்ஸ் நகரில் இருந்து சொந்த கட்சி எம்.பி.க்களுக்கு தெரசா மே உருக்கமான கடிதம்

    இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது சொந்த கட்சி எம்.பி.க்களுக்கு எழுதிய உருக்கமான கடிதத்தில், தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பிரெக்ஸிட் நடவடிக்கையை ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். #Brexit #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக முடிவு செய்த இங்கிலாந்து அரசு, இது தொடர்பாக 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தியது. பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர்.

    அதன்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே முன்னெடுத்தார். ஆனால் அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை அவர் வெற்றிகரமாக செய்து முடிப்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஏனென்றால் பிரெக்ஸிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை நிராகரித்த இங்கிலாந்து நாடாளுமன்றம், ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவையும் புறக்கணித்தது. இதனால் ஐரோப்பிய கூட்டமைப்புடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியாக வேண்டிய நிலையில் தெரசா மே உள்ளார்.

    ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ, பிரெக்ஸிட்டுக்காக ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தமே இறுதியானது என்றும், இனி பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என்றும் கூறிவிட்டது. இது தெரசா மேவுக்கு மேலும் தலைவலியாக அமைந்துள்ளது.

    இதற்கிடையில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதில் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் ‘திடீர்’ திருப்பமாக 53 சதவீதம் பேர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை இங்கிலாந்து தாமதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்த நிலையில், ‘பிரெக்ஸிட்’ பேச்சுவார்த்தைக்காக பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் சென்றுள்ள தெரசா மே, அங்கிருந்தபடி தனது கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், எம்.பி.க்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கிவைத்து விட்டு பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

    அந்த கடிதத்தில் தெரசா மே கூறியிருப்பதாவது:-

    ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் எம்.பி.க்களின் நிலைப்பாட்டை நான் குறைத்து மதிப்பிடவில்லை. நமது நாட்டிற்கு எது சிறந்ததோ அதை செய்யவேண்டும் என்பதே நம் அனைவரின் நோக்கமாக உள்ளது. அதை செய்ய நமக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை என்றாலும், அதை நாம் செய்துதான் ஆக வேண்டும். நாடாளுமன்றத்தின் மூலம் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை நிறைவேற்ற தவறினால் எந்த காரணத்துக்காக மக்கள் நம்மை அவர்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்களோ அது தோல்வியில் முடியும். மக்களின் பிரகாசமான எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே எம்.பி.க்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பிரெக்ஸிட்டை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார். #Brexit #TheresaMay
    Next Story
    ×