search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா? - லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு
    X

    விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா? - லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு

    பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிய விஜய் மல்லையா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா என்பது இன்று தெரியும். #VijayMallya #VijayMallyaextradition
    லண்டன்:

    நாடு அறிந்த தொழில் அதிபரும், கிங் பி‌ஷர் நிறுவனங்களின் தலைவருமான விஜய் மல்லையா (வயது 62), பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பி விட்டார்.

    அவர் மீது இந்திய கோர்ட்டுகளில் சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்குகள் போட்டுள்ளன.

    இந்த வழக்குகளை அவர் எதிர்கொள்வதற்காக, அங்கிருந்து இங்கு நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.



    இது தொடர்பான வழக்கில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி விசாரணை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்றது.

    இங்கிலாந்து அரசின் சி.பி.எஸ். வக்கீல்கள் குழுவினர் மார்க் சம்மர்ஸ் தலைமையில் ஆஜராகி விஜய் மல்லையா, வங்கிக்கடன் மோசடியிலும், சட்டவிரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டதற்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாக இந்திய அரசின் தரப்பில் வாதிட்டனர்.

    அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.

    கிளாரே மான்ட்கோமெரி தலைமையிலான விஜய் மல்லையா தரப்பு வக்கீல்கள், தொழிலில் ஏற்பட்ட தோல்வியால்தான் அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை, நேர்மையற்ற விதத்தில் மோசடியில் ஈடுபடவில்லை என வாதிட்டனர்.

    மேலும் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு, மொத்த கடன்களில் 80 சதவீதத்தை அவர் 2016-ம் ஆண்டு திரும்பச்செலுத்த முன்வந்தபோது அதை ஏற்க மறுத்து விட்டது எனவும் கூறினர்.

    இப்படி இரு தரப்பிலும் தொடர்ந்து வாதங்கள், எதிர்வாதங்கள் நடைபெற்றன.

    அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    அந்த தீர்ப்பு இன்று (திங்கட்கிழமை) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விஜய் மல்லையா கோர்ட்டில் ஆஜர் ஆகிறார்.

    அப்போது அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது பற்றிய தனது தீர்ப்பை மாஜிஸ்திரேட்டு வழங்குகிறார். அவரை நாடு கடத்துமாறு உத்தரவிட்டால், இந்த தீர்ப்பு குறித்த விவரம் இங்கிலாந்து அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் உண்டு.

    அதேபோன்று நாடு கடத்த தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டால் அந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசு மேல்முறையீடு செய்வதற்கும் அதே 14 நாட்கள் அவகாசம் இருக்கிறது.

    ஆனால் நாடு கடத்த கோர்ட்டு உத்தரவிட்டு, அதை விஜய் மல்லையா மேல்முறையீடு செய்யவில்லை என்றால் அவரை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை மந்திரி உத்தரவிடுவார். அவர் உத்தரவிட்ட 28 நாளில் அவர் நாடு கடத்தப்பட்டு விடுவார்.

    விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டு விட்டால் அவரை அடைப்பதற்கு மும்பை ஆர்தர் ரோடு சிறை தயாராக உள்ளது. அந்தச் சிறையில் அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகின்றன.

    இது தொடர்பாக லண்டன் கோர்ட்டில் இந்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘‘விஜய் மல்லையாவுக்கு டி.வி. பெட்டி, மேற்கத்திய கழிவறை, மெத்தை, தலையணை, பீங்கான் சாப்பாட்டு தட்டு, 2 கிண்ணங்கள் தரப்படும்; சிறை அறைக்குள் சூரிய ஒளி படுகிற வசதி, நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான வசதி, நூலக வசதி செய்து தரப்படும்’’ என கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது.

    தீர்ப்பு வரவுள்ள நிலையில் விஜய் மல்லையா டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர், ‘‘நான் ஒரு ரூபாய்கூட கடன் வாங்கவில்லை. கிங்பி‌ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம்தான் கடன் வாங்கியது. வர்த்தக தோல்வியினால் பண இழப்பு ஏற்பட்டது. உத்தரவாதம் அளித்தவர் மோசடி பேர்வழி அல்ல’’ என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. #VijayMallya #VijayMallyaextradition
    Next Story
    ×