search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் தடைகள் பொருளாதார பயங்கரவாதம்- ஈரான் அதிபர் கடும் தாக்கு
    X

    அமெரிக்காவின் தடைகள் பொருளாதார பயங்கரவாதம்- ஈரான் அதிபர் கடும் தாக்கு

    அமெரிக்கா விதித்துள்ள தடைகள் பொருளாதார பயங்கரவாதம் என்றும், இதனை சகித்துக்கொள்ள முடியாது என்றும் ஈரான் அதிபர் கூறியுள்ளார். #USSanctions #Rouhani #EconomicTerrorism
    தெஹ்ரான்:

    ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த மே மாதம் விலகியதுடன், ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இந்த பொருளாதார தடைக்கு ஒத்துழைக்காத நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது. குறிப்பாக ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை உலக நாடுகள் முற்றிலுமாக குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியது.

    இந்நிலையில் ஈரானில் நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டில் ஈரான் அதிபர் ஹசன் ருகானி பேசியதாவது:-

    கவுரவமான ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள அநியாயமான மற்றும் சட்டவிரோத பொருளாதார தடைகளானது, எங்கள் நாட்டை இலக்காகக் கொண்டுள்ள பயங்கரவாதம் ஆகும். எங்கள் சுதந்திரம் மற்றும் அடையாளத்திற்கு அச்சுறுத்தல் மட்டுமல்லாமல், நமது நீண்டகால உறவுகளை முறித்துக்கொள்ளும் வகையிலான முழுமையான தாக்குதலை எதிர்கொண்டுள்ளோம். 

    சீனாவின் வர்த்தகத்தில் அவர்கள் அழுத்தம் கொடுக்கும்போது, நாம் அனைவரும் பாதிக்கப்படுகிறோம். துருக்கி மீது நடவடிக்கை எடுத்தால் நாம் அனைவரும் பாதிக்கப்படுகிறோம். அவர்கள் ரஷ்யாவை எந்த நேரத்திலும் அச்சுறுத்தலாம். அப்போது நாமும் நமது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டிருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும். 

    அவர்கள் ஈரான் மீது தடைகள் விதிக்கும்போது, நம் அனைவருக்குமான சர்வதேச வர்த்தக பலன்கள், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை தடுக்கிறார்கள். உண்மையை சொல்லப்போனால், அவர்கள் ஒவ்வொரு நாட்டின் மீதும் தடைகளை விதிக்கிறார்கள். இதுபோன்ற ஆணவமான போக்கை நாம் சகித்துக்கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் துருக்கி நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள் பங்கேற்றனர்.  #USSanctions #Rouhani #EconomicTerrorism
    Next Story
    ×