search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - சிங்கப்பூர் ஹாக்கத்தான் வெற்றியாளர்களுக்கு பரிசளித்தார் பிரதமர் மோடி
    X

    இந்தியா - சிங்கப்பூர் ஹாக்கத்தான் வெற்றியாளர்களுக்கு பரிசளித்தார் பிரதமர் மோடி

    இந்தியா - சிங்கப்பூர் முதல் ஹாக்கத்தான் போட்டியில் 6 குழுக்களை சேர்ந்த வெற்றியாளர்களுக்கு இன்று பரிசளித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார். #PMModi #Hackathon
    சிங்கப்பூர்:

    இந்தியாவில் எதிர்காலத்தில் ஏற்படும் மக்கள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதை நோக்கமாக கொண்டு உலக அளவிலான பங்கேற்புடன் ஹாக்கத்தான் போட்டியை நிதி ஆயோக் தொடங்கியுள்ளது.  

    உலகிலேயே மிகப்பெரிய ஹாக்கத்தான்களின் ஒன்றாக கருதப்படும் மூவ் ஹாக் 10 குறிக்கோள்களை முன்வைத்துள்ளது.  இது மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.  ஒன்று இணையத்தில் பதிவு செய்வது, இதைத்தொடர்ந்து சிங்கப்பூரில் முதலாவது போட்டி, புதுடெல்லியில் இறுதிப் போட்டி என்பது இந்தப்படி நிலைகளாகும்.

    ஹாக்கத்தான் விருது பெற அங்கீகரிக்கப்படும் 10 வெற்றியாளர்கள் உள்ளிட்டோருக்கு மொத்த பரிசுத் தொகையாக ரூ.2 கோடிக்கு மேல் வழங்கப்படும்.

    முதல்முறையாக இந்த ஹாக்கத்தான் போட்டியில் பங்கேற்ற குழுக்களில் இந்தியாவை சேர்ந்த 3 குழுக்களும், சிங்கப்பூரை சேர்ந்த 3 குழுக்களும் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டன. சமீபத்தில் சிங்கப்பூரில் தொடந்து 36 மணிநேரம் நடைபெற்ற இறுதிச்சுற்றில் இவர்கள் பங்கேற்றனர்.

    இந்தியாவை சேர்ந்த 3 குழுவினரும், சிங்கப்பூரை சேர்ந்த 3 குழுவினரும் வெற்றியாளர்களாக இறுதி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் முதலிடம் பெற்ற குழுவினருக்கு 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களும், இரண்டாவது இடத்தை பிடித்த  குழுவினருக்கு 6 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களும்,  மூன்றாவது இடத்தை பிடித்த குழுவினருக்கு 4 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்தது.
        
    இந்நிலையில், ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்த ஹாக்கத்தான் போட்டியில் பங்கேற்ற வெற்றியாளர்களை இன்று சந்தித்து பரிசுகளை வழங்கியதுடன் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.



    இந்தியா - சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த தேசிய சாரண இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் மாற்று நாடுகளை கண்டுவரும் திட்டத்தின்கீழ் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்துள்ள சாரண இயக்கத்தினரையும் மோடி சந்தித்து உரையாடினார்.

    மேலும், இன்று காலை சிற்றுண்டி விருந்தின்போது ஆசியான் நாடுகளைச் சேர்ந்த அனைத்து தலைவர்களையும் மோடி சந்தித்தார். அவர்களுடன் குழுவாக புகைப்படமும் எடுத்து கொண்டார்.  #PMModi #Hackathon 
    Next Story
    ×