search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி வாழ்த்து செய்தியில் இந்துக்களை மறந்தார் டிரம்ப்
    X

    தீபாவளி வாழ்த்து செய்தியில் இந்துக்களை மறந்தார் டிரம்ப்

    தீபாவளி வாழ்த்து செய்தியில் இந்துக்களை குறிப்பிட்டு வாழ்த்த மறந்த டொனால்டு டிரம்ப் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். #DiwaliCelebrate #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஜனாதிபதி டிரம்ப் பேசும்போது, “இந்தியர்கள் கடினமான உழைப்பாளிகள், இந்தியாவை சேர்ந்த பல லட்சம் கடின உழைப்பாளிகளுக்கு தாயகம் அமெரிக்கா” என புகழாரம் சூட்டினார்.

    மேலும், “பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன், அவரிடம் விரைவில் பேசுவேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த கொண்டாட்டத்தையொட்டி அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், “இன்று (நேற்று முன்தினம்) நாம் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இங்கே கூடி உள்ளோம். தீபாவளி பண்டிகை அமெரிக்காவிலும், உலககெங்கும் உள்ள புத்த மதத்தினர், சீக்கிய மதத்தினர், சமண மதத்தினர் ஆகியோருக்கு விடுமுறை கொண்டாட்டமாக அமைந்துள்ளது. தீபாவளி ஒளியேற்றுவதற்கு கோடானுகோடி மக்கள் குடும்பங்களாக, நண்பர்களாக கூடி உள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் இந்தப் பதிவில் அவர் இந்துக்களை குறிப்பிட்டு வாழ்த்த மறந்து விட்டார். இதனால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். சி.என்.என். டெலிவிஷனின் நாடாளுமன்ற செய்தியாளர் மனு ராஜூ இதை குறிப்பிட்டு பதிவிட்டார். உடனே 2-வது முறையாக டிரம்ப் டுவிட்டர் பதிவிட்டார். ஆனால் அதிலும் இந்துக்களை அவர் மறந்து விட்டு விட்டார்.

    மீண்டும் அந்த செய்தியாளர் டிரம்பின் தவறை சுட்டிக்காட்டினார்.

    அதைத் தொடர்ந்து 3-வது முறையாக டிரம்ப் டுவிட்டரில் இந்துக்களையும் சேர்த்து பதிவிட்டார். அதில் அவர், “இந்து மக்களின் தீபங்களின் விழாவான தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது எனக்கு மிகுந்த கவுரவம். (தீபாவளி கொண்டாட) வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறை மிக மிக சிறப்பான (இந்து) மக்களை கொண்டுள்ளது” என குறிப்பிட்டார். 
    Next Story
    ×