search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் ஜாமீன் விடுதலை ரத்தா? பாக். சுப்ரீம் கோர்ட்டு அடுத்த மாதம் விசாரணை
    X

    ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் ஜாமீன் விடுதலை ரத்தா? பாக். சுப்ரீம் கோர்ட்டு அடுத்த மாதம் விசாரணை

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஜாமீன் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு அடுத்த மாதம் விசாரிக்கிறது. #NawazSharif #Summon #SupremeCourt
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்குகளில் சிக்கி தவிக்கிறார். அவரும் அவரது மகள் மரியம், மருமகன் கேப்டன் சப்தார், மகன்கள் ஹசன், உசேன் ஆகியோரும் ஊழல் செய்து குவித்த பணத்தில் லண்டன் அவென்பீல்டு பகுதியில் சொகுசு வீடுகள் வாங்கி குவித்ததாக ஊழல் தடுப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கலானது.



    இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப் மகன்கள் ஹசன், உசேன் ஆகியோர் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகாத நிலையில் அவர்கள் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    நவாஸ் ஷெரீப், மரியம், கேப்டன் சப்தார் ஆகியோர் மீதான வழக்கை இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு கோர்ட்டு விசாரித்து, நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு, மரியத்துக்கு 7 ஆண்டு, கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

    அதையடுத்து அவர்கள் ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இருப்பினும், நவாஸ் ஷெரீப், மரியம், கேப்டன் சப்தார் ஆகியோர் தரப்பில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களும், ஜாமீன் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.அவற்றை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் அத்தார் மினல்லா, மியான்குல் ஹசன் அவுரங்கசீப், அவர்கள் 3 பேரின் மேல்முறையீட்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தனர். அவர்களுக்கு ஜாமீனும் வழங்கினர். அதைத் தொடர்ந்து அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

    ஆனால் அவர்களை ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்ததை எதிர்த்து ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.

    அந்த மேல் முறையீட்டு மனு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் அமர்வின் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அதை அவர்கள் விசாரணைக்கு ஏற்றனர்.

    மேலும் அவர்களது தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீனில் விடுவித்தது செல்லுமா என்பதுபற்றிய விசாரணையை அடுத்த மாதம் 12-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். முன்னதாக நடந்த முதற்கட்ட விசாரணையின்போது, நீதிபதிகளிடம் நவாஸ் ஷெரீப் தரப்பு வக்கீல் ஹாரிஸ், “நான் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள், மருமகன் மீதான மேலும் இரு ஊழல் வழக்குகளின் விசாரணைக்கு முழுவீச்சில் தயாராகி வருகிறேன். எனவே இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி போட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

    அதையடுத்துதான் விசாரணை அடுத்த மாதம் 12-ந் தேதிக்கு ஒத்தி போடப்பட்டது.

    அப்போது தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் வேடிக்கையாக, “எனக்கு உடல் நலம் சரியில்லை. இந்த மனுக்கள் மீதான விசாரணைக்கு நீங்கள் (ஹாரிஸ்) ஆஜராவதால்தான் எனக்கு படபடப்பு அதிகமாக இருக்கிறது என்று எனது டாக்டர்கள் சொல்கிறார்கள்”என குறிப்பிட்டார்.

    அதைத் தொடர்ந்து கோர்ட்டில் எல்லோரும் சிரித்து விட்டனர். எனவே, நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள், மருமகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்தாகுமா என்பது அடுத்த மாதம் 12-ந் தேதி தெரிய வரலாம்.
    Next Story
    ×