search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகை உலுக்கிய முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுநாள் - ஆஸ்திரேலிய மக்கள் மவுன அஞ்சலி
    X

    உலகை உலுக்கிய முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுநாள் - ஆஸ்திரேலிய மக்கள் மவுன அஞ்சலி

    முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #WW1
    கான்பெர்ரா:

    முதல் உலகப் போர் என்றழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த பெரும்போரினில் உலகம் தழுவிய அளவில் பல நாடுகள் பங்கேற்ற போதிலும், பெரும்பாலும் இந்தப் போர் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது.

    இதில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒரு பக்கமும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் மறுபக்கமும் நின்று போரிட்டன.

    இதன் அளவும், செறிவும் முன்னெப்போதும் நிகழ்ந்த பெரும் போர்களில் இல்லாத அளவுக்கு மிகப் பெரியதாக இருந்தது. 6 கோடி ஐரோப்பியர்களை உள்ளடக்கிய (இந்திய வீரர்கள் சுமார் 13 லட்சம் பேர்) சுமார் 7 கோடி வீரர்கள் இந்தப் போரில் ஈடுபட்டிருந்தனர்.


    நவீன இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தரமான கனரகப் பீரங்கிகள், மேம்பட்ட போக்குவரத்து, விமான தாக்குதல், நீர்மூழ்கி கப்பல்கள் என்பன இப்போரின் தாக்கத்தையும், பாதிப்பையும் பெரிதும் அதிகப்படுத்தின.

    இதில் சாதாரண மக்கள், போர் வீரர்கள் என சுமார் 2 கோடி பேர் உயிரிழந்தனர். இருதரப்பிலும் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தும், மாற்றுத்திறனாளிகளாக மாறியும் தங்களது வாழ்க்கையின் எதிர்காலத்தை தொலைத்தனர்.

    1871-ம் ஆண்டில் ஜெர்மனி ஒருங்கிணைக்கப்பட்டதும், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் வல்லரசுகளிடையே இக்கட்டான அதிகாரச் சமநிலை நிலவியதும் இப்போர் உருவாவதற்கான அடிப்படைக் காரணங்களாக பார்க்கப்படுகின்றது.

    இவற்றுடன், 19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியிடம் நிலப்பகுதிகளை இழந்ததில் பிரான்சுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு உணர்வு, ஜெர்மனிக்கும், பிரிட்டனுக்கும் இடையே பொருளியல், ஆயுதபலம், குடியேற்றங்கள் தொடர்பாக எழுந்த போட்டிகள், பால்கன் பகுதிகளில் ஆஸ்திரோ-ஹங்கேரிய ஆட்சி உறுதியற்ற நிலையில் இருந்தமை போன்றவை இப்போருக்கான தவிர்க்க முடியாத சர்வதேச அரசியல் காரணங்களாக கருதப்படுகின்றன.

    இவை அனைத்தைக் காட்டிலும் மேலாக, ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்ட் மற்றும் அவருடைய மனைவி 28-06-1914 அன்று காரில் சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் முதல் உலகப் போர் தொடங்குவதற்கான உடனடிக் காரணமாக மாறிற்று. பிரான்சிஸ் பெர்டினாண்டை சுட்ட கொலையாளியான காவ்ரீலோ பிரின்சிப் என்பவன் செர்பியா நாட்டைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.


    இதற்காக பழிவாங்கும் நோக்குடன், செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. பல ஐரோப்பிய நாடுகள் தங்களது கூட்டுப் பாதுகாப்பிற்காக ஒன்றோடொன்று செய்து கொண்டிருந்த முந்தைய ஒப்பந்தங்கள் காரணமாகவும், சிக்கலான பன்னாட்டுக் கூட்டணிகள் காரணமாகவும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இந்தப் போரில் ஈடுபடவேண்டிய கட்டாய நிலை உருவானது. இந்த போர் 28-7-1914 அன்று தொடங்கி 11-11-1918 அன்று முடிவுக்கு வந்தது.

    1995-ம் ஆண்டு முதல் இந்நாளில் (நவம்பர் பதினொன்றாம் தேதி) காலை 11 மணிக்கு பிரிட்டன் மக்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    உலக வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற இந்த முதல் உலகப்போர் நவம்பர் மாதம் 11-ம் தேதி முடிவடைந்ததை நினைவுக் கூரும் வகையில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் (உள்ளூர் நேரப்படி) இன்று போரில் பலியான சுமார் 74 ஆயிரம் இந்திய சிப்பாய்கள் உள்பட சுமார் 2 கோடி வீரர்களுக்கு நூற்றாண்டு நினைவு தினமாக மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    இப்போர் முடிவடைந்த 100-வது ஆண்டை (2018) நினைவு கூர்ந்தும், முடிவுக்குவந்த மாதம் மற்றும் தேதியை (11-11) நினைவு கூர்ந்தும் ஆஸ்திரேலியா நாட்டின் கான்பெர்ரா உள்ளிட்ட உலகின் பெருநகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் இன்று காலை மயான அமைதியும், நெஞ்சை உலுக்கும் நிசப்தமும் நிலவியது.

    கான்பெர்ரா நகரில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
    அடிலெய்டே நகரில் விமானம் மூலம் காகிதத்தால் செய்யப்பட்ட சிவப்பு நிற பாப்பி மலர்கள் தூவப்பட்டன. நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் மிகப்பெரிய இரங்கல் கூட்டம் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    இதேபோல் உலகில் உள்ள இதர நாடுகளிலும், முதல் உலகப் போரில் பங்கேற்று உயிர்நீத்த தங்களது நாடுகளை சேர்ந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.


    பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள முதல் உலகப்போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான நூற்றாண்டு நினைவிடத்தில் ஆண்டுதோறும் கூடும் ஏராளமான மக்கள், மலர்ந்தப் பின்னர் சில நாட்களுக்கு மட்டுமே முழுப்பொலிவுடன் தோற்றமளிக்கும் ‘பாப்பி’ மலர்களை இங்கு சமர்ப்பணம் செய்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். இதனால், இந்த அஞ்சலி நிகழ்ச்சி ‘பாப்பி அஞ்சலி’ என்றும் அழைக்கப்படுகிறது.

    தங்களுடைய நாட்டின் கொள்கைகளையும் தன்மானத்தையும் காக்க முதல் உலகப் போரில் பங்கேற்று, பாப்பி மலர்களையொத்த இளம் வயதில் பலியான வீரர்களின் தியாகத்தை மெச்சும் வகையில் இந்த நினைவிடத்தில் பாப்பி மலர்களை தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. #WW1
    Next Story
    ×