search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனா, பாகிஸ்தான் இடையே 16 ஒப்பந்தம் கையெழுத்து
    X

    சீனா, பாகிஸ்தான் இடையே 16 ஒப்பந்தம் கையெழுத்து

    லீ கெகியாங், இம்ரான்கான் சந்திப்பை தொடர்ந்து சீனா, பாகிஸ்தான் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. #Pakistan #China #Agreement
    பீஜிங்:

    பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றுள்ள இம்ரான்கான், முதல் முறையாக சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் பீஜிங் நகருக்கு போய் சேர்ந்தார்.

    பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. சர்வதேச நிதியத்திடம் இருந்து பெற்ற (ஐ.எம்.எப்.) கடன்களை திருப்பி செலுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இதற்காக நட்பு நாடுகளிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நிதி உதவி பெற முடிவு செய்தார். அந்த வகையில் அவர் முதலில் சீனாவின் உதவியை நாட முடிவு செய்தார்.



    ஒரு பக்கம், சீனாவுடனான சி.பி.இ.சி. என்னும் சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்துக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பி இருந்தாலும், இந்த நெருக்கடியான கால கட்டத்தில் சீனாவின் உதவி அவசியம் தேவை என உணர்ந்துதான் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக 4 நாள் அரசு முறை பயணத்தை இம்ரான்கான் மேற்கொண்டுள்ளார்.

    அவர் முதலில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.

    அதைத் தொடர்ந்து நேற்று சீன பிரதமர் லீ கெகியாங்கை, பீஜிங் நகரில் நாடாளுமன்ற கட்டிடத்தில் இம்ரான்கான் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அவரை வரவேற்று லீ பேசும்போது, “ எல்லா சூழ்நிலைக்கும் ஏற்ற கூட்டாளிகள் என்று சீனாவையும், பாகிஸ்தானையும் அழைக்கலாம். நாங்கள் அந்த நாட்டின்மீது அரசியல் ரீதியில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். எல்லா துறையிலும் ஒத்துழைப்பை கொண்டுள்ளோம். சீனாவின் வெளிநாட்டு கொள்கையில் பாகிஸ்தான் எப்போதுமே முன்னுரிமை பெற்ற நாடாக உள்ளது. உங்கள் வருகை நம் இரு நாடுகள் இடையேயான உறவை மேலும் ஒருங்கிணைத்து வலுப்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.

    லீ கெகியாங்குக்கு நன்றி தெரிவித்து இம்ரான்கான் பேசினார்.

    அப்போது அவர், “ இரு நாடுகள் இடையேயான உறவு ஆழமாக இருந்து வந்துள்ளது. 2013-ம் ஆண்டில் சி.பி.இ.சி. என்னும் சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் ஒரு யோசனையாக மட்டுமே இருந்தது. இப்போது அது களத்திற்கு வந்துள்ளது. இது எங்கள் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கும், பொருளாதார வளர்ச்சிவீதம் அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பை எங்களுக்கு உருவாக்கி தந்துள்ளது” என்று கூறினார்.

    இருவரும் சந்தித்துப் பேசிய பின்னர் சீனா, பாகிஸ்தான் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

    இரு நாடுகளும் வனம், பூமி அறிவியல், விவசாயம், தொழில் உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளன. லீ கெகியாங், இம்ரான்கான் சந்திப்புக்கு பின்னர் சீன வெளியுறவு துணை மந்திரி கோங் சுவான்யூ நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து பாகிஸ்தான் மீண்டு வருவதற்கு தேவையான உதவியை சீனா செய்யும்” என கூறினார்.பாகிஸ்தானுக்கு சீனா 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 44 ஆயிரம் கோடி) நிதி உதவி வழங்கும் என வெளியாகி உள்ள தகவல் குறித்து கோங் சுவான்யூவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், “தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து பாகிஸ்தான் மீண்டு வருவதற்கு தேவையான உதவியை சீனா அளிக்கும். இது இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பு குழுக்களும் பேச்சு வார்த்தை நடத்துவர். பாகிஸ்தானில் மந்திரிகளின் விமர்சனத்துக்கு ஆளானாலும்கூட, 60 பில்லியன் டாலர் (ரூ.4 லட்சத்து 44 ஆயிரம் கோடி) மதிப்பிலான சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் மாற்றம் இல்லை” என்று கூறினார். 
    Next Story
    ×