search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
    X

    ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை

    மூன்று நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ள பாதுகாப்புத்துறை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், அந்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி ப்ளோரன்ஸ் பார்லியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #NirmalaSitharaman
    பாரிஸ் :

    பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் இடையே கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சந்திப்பின் போது இருநாட்டு பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான வருடாந்திர சந்திப்பு நடத்துவதற்கு இருவரும் பரஸ்பரம் ஒப்புதல் வழங்கினர். அதனடிப்படையில் இந்த ஆண்டுக்கான சந்திப்பில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் சென்றுள்ளார்.

    பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரி ப்ளோரன்ஸ் பார்லியை, நிர்மலா சீதாராமன் நேற்று சந்தித்தார். இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இந்தியா-பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக அலோசனை நடத்தப்பட்டது. மேலும், இரு நாடுகளும் இணைந்து ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை உற்பத்தி செய்வது குறித்தும் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து ப்ளோரன்ஸ் பார்லி மற்றும் நிர்மலா சீதாராமன் தனியாக சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது ரபேல் விவகாரம் குறித்து ஆலோசனை நடைபெற்றதா எனும் உறுதியான தகவல்கள் ஏதும் அரசு தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

    பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா செய்து கொண்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

    மேலும், இந்த ஒப்பந்தத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில் இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு மந்திரிகள் இடையிலான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #NirmalaSitharaman
    Next Story
    ×