search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹொடைடா துறைமுகத்தில் சரக்கு, எண்ணெய் கப்பல்களை ஹவுத்தி போராளிகள் சிறைபிடித்தனர்
    X

    ஹொடைடா துறைமுகத்தில் சரக்கு, எண்ணெய் கப்பல்களை ஹவுத்தி போராளிகள் சிறைபிடித்தனர்

    ஏமன் நாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தில் பத்துக்கும் அதிகமான சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்களை ஹவுத்தி போராளிகள் சிறைபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #Cargoshipsdetained
    சனா:

    ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரான் அரசின் ஆதரவுடன் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் சமீபத்தில் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்களில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.


    ஏமன் அரசுக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முயன்றது. இருதரப்பினருக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கான இந்த முயற்சி கடந்த மாதம் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில், கோதுமை மாவு, சர்க்கரை என சுமார் 5700 டன் அளவிலான நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த சரக்கு கப்பல்கள் மற்றும் சுமார் 20 ஆயிரம் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஏற்றிவந்த டேங்கர் கப்பல்களை ஹவுத்தி போராளிகள் சிறைபிடித்து வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Cargoshipsdetained #oiltankersdetained #Houthimilitia #Hodeidahport
    Next Story
    ×