search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிகவும் எதிர்பார்த்த சூரிய ஆய்வு செயற்கைக்கோள் ஏவுவதை நாசா ஒத்திவைத்தது
    X

    மிகவும் எதிர்பார்த்த சூரிய ஆய்வு செயற்கைக்கோள் ஏவுவதை நாசா ஒத்திவைத்தது

    நெருப்புக் கோளமான சூரியனை நெருக்கமாக சென்று ஆய்வு செய்வதற்காக நாசா தயாரித்த செயற்கைகோளை இன்று விண்ணில் செலுத்தும் திட்டம் கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது. #NASA #ParkerSolarProbe
    நியூயார்க்:

    வெப்ப கிரகமான சூரியன் குறித்த வியத்தகு தகவல்களை திரட்டிவர கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ‘ஹீலியோஸ் 1’ மற்றும் ‘ஹீலியோஸ் 2’ செயற்கைக்கோள்களை ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட்டாக விண்ணில் செலுத்தின.

    பூமியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் உயரத்திற்கு சென்ற இந்த செயற்கைக்கோள்கள் சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. 

    இதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் (Solar Wind)  தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை.  கடந்த 1985-ம் ஆண்டுவரை சில தகவல்களை அனுப்பிய இந்த செயற்கைக்கோள்கள் பின்னர் செயலிழந்து சூரியனின் சுற்றுவட்ட பாதையில் நிறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கிடையில், நாற்பது லட்சம் மைல்கள் தொலைவில்ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கக்கும் சூரியனை மிக அருகில் சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe) எனும் செயற்கைகோளை 20 லட்சம் டாலர்கள் செலவில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா உருவாக்கியுள்ளது.  

    இந்த ஆய்வு திட்டத்துக்கு சூரியனில் ஏற்படும் புயல்கள் பற்றி 60 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து கூறிய யூகேன் பார்க்கரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி அமெரிக்க நேரப்படி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் செலுத்த நாசா நேரம் குறித்து இருந்தது.

    சூரியன் மற்றும் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய ‘சூரிய புயல்’ அல்லது சூரிய பருவநிலை தொடர்பான புதிய தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பக் கூடிய இந்த பார்க்கர் சோலார் புரோப், சூரிய பரப்பின் 64 லட்சம் கி.மீ பகுதியில் பறக்கும் என்றும், சுமார் 1,400 செல்சியஸ் (2,500 பாரன்ஹீட்) வெப்பம் மற்றும் மிகப்பெரிய கதிரியக்கத்தையும் தாங்கி, எதிர்கொண்டு ஆய்வு செய்யும் திறன்கொண்டது. சூரியனின்  வெப்பம் மிகுந்த கரோனா பகுதியில் பார்க்கர் சோலார் புரோப் பயணித்து ஆய்வு செய்யும் என்றும் கூறப்படுகிறது. 

    இந்த செயற்கைகோள் அதீத தட்பவெப்ப நிலைகளைத் தாங்கும் சுமார் 11.4 செ.மீ (4.5 அங்குலம்) தடிமன் உள்ள கார்பன் காம்போசிட்டால் ஆன கவசத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடிய திறன்கொண்ட பார்க்கர் சோலார் புரோப், சுமார் 6 வருடங்கள் மற்றும் 11 மாதங்களில் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

    அமெரிக்காவின் அரிய முயற்சியான ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe) செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுவதை தொலைக்காட்சியில் காண்பதற்காக அந்நாட்டு மக்கள் இன்று அதிகாலை வரை விழித்திருந்து காத்திருந்தனர்.

    இந்நிலையில், விண்ணில் செலுத்துவதற்கான இறங்குமுக கவுண்ட்டவுன் நேரத்தில் வெறும் ஒரு நிமிடம் 55 நிமிடங்கள் மிச்சமிருந்த நிலையில் இந்த செயற்கைகோளை சுமந்து செல்லும் ’டெல்ட்டா-4’ 
    ( Delta IV ) ராக்கெட்டை உந்திசெலுத்தும் எரிசக்தியான ஹீலியம் கொள்கலத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டது, கம்ப்யூட்டர்களின் எச்சரிக்கை ஒலியால் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து, ‘பார்க்கர் சோலார் புரோப்’ செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த குறைபாடு சீரடைந்த பின்னர் நாளை விண்ணில் ஏவப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #NASA  #ParkerSolarProbe 
    Next Story
    ×