search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் மக்களின் எதிர்காலத்துக்காக சிறை செல்கிறேன் - நவாஸ் ஷரிப் பேட்டி
    X

    பாகிஸ்தான் மக்களின் எதிர்காலத்துக்காக சிறை செல்கிறேன் - நவாஸ் ஷரிப் பேட்டி

    பாகிஸ்தானின் எதிர்காலத்தை மாற்றுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நவாஸ் ஷரிப், இளம் தலைமுறையினருக்காக சிறை செல்லும் தியாகத்தை ஏற்பதாக குறிப்பிட்டுள்ளார். #Pakistanfuture #Nawaz
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பிரதமராக இருந்து வந்த நவாஸ் ஷரிப், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு இதே ஜூலை மாதம் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் பிரதமர் பதவியையும் இழந்தார்.

    அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டு அப்போது உத்தரவிட்டது.

    இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷரிப் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ‘அவென்பீல்டு’ வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில், நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என அந்த கோர்ட்டு முடிவு செய்தது. 

    அதைத் தொடர்ந்து நவாஸ் ஷரிப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதித்து கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இதற்கிடையே லண்டன் நகரில் புற்றுநோயால் அவதியுற்று வருகிற மனைவி குல்சூம் நவாசை சந்திப்பதற்காக நவாஸ் ஷரிப் மகள் மரியம் நவாசுடன் அங்கு சென்றார்.

    அங்கு குல்சூம் நவாஸ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நவாஸ் ஷரிப், மகள் மரியம் நவாசுடன் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு பாகிஸ்தான் திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    லண்டனில் இருந்து அபுதாபி சென்ற நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் அங்கிருந்து விமானம் மூலம் பாகிஸ்தான் புறப்பட்டு வந்துகொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே லாகூர் அல்லது இஸ்லாமாபாத்தில் விமானத்தில் வந்து இறங்கியதும் நவாஸ் ஷரிப்பையும், மகள் மரியம் நவாசையும் கைது செய்ய தேசிய பொறுப்புடைமை முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அவர்களை கைது செய்து ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைப்பதற்கு முடிவு செய்து, ஏற்பாடு ஆகி உள்ளது.

    நவாஸ் ஷெரீப்பையும், மரியம் நவாசையும் கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்வதற்காக 2 ஹெலிகாப்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒன்று லாகூர் விமான நிலையத்திலும், மற்றொன்று இஸ்லாமாபாத் விமான நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பாகிஸ்தானின் எதிர்காலத்தை மாற்றுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நவாஸ் ஷரிப், இளம் தலைமுறையினருக்காக சிறை செல்லும் தியாகத்தை ஏற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, மரியம் நவாஸ் இன்று வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பேசியுள்ள நவாஸ் ஷரிப், ‘நாட்டின் எதிர்காலத்தை நாம் மாற்ற வேண்டும். இந்த வாய்ப்பு மீண்டும் ஒருமுறை கிடைக்காது. என்னால் இயன்றவற்றை எல்லாம் நான் செய்து விட்டேன்.

    எனக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதையும், நான் நேரடியாக சிறைக்கு கொண்டு செல்லப்படுவேன் என்பதையும் நான் அறிவேன். உங்களுடைய வருங்கால சந்ததியினருக்காகவும், பாகிஸ்தானின் எதிர்காலத்துக்காகவும் இந்த தியாகத்தை நான் செய்கிறேன். என்னுடையை ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் துணையாக இருந்து ஆதரிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். #Pakistanfuture  #Nawaz 
    Next Story
    ×