search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம்: பாகிஸ்தான் அரசு திடீர் முடிவு
    X

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம்: பாகிஸ்தான் அரசு திடீர் முடிவு

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது என பாகிஸ்தான் அரசு திடீர் முடிவு எடுத்து உள்ளது. #Pakistan #FinancialReform
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள காஷ்மீர் பகுதி ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றும் ஆசாத் காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு என்று தனி அதிபர், பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தாலும்கூட, அதன் முக்கிய நிர்வாக பொறுப்பை பாகிஸ்தான் அரசு தன்னிடம்தான் வைத்துக்கொண்டு உள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் அரசின் காஷ்மீர் விவகாரங்கள் துறை அமைச்சகம்தான் இதைக் கவனிக்கிறது.

    இந்த பகுதிக்கு பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டும் என்று அவ்வப்போது அங்கு போராட்டங்களும் நடந்து வருகின்றன.இதே போன்று அங்கு உள்ள கில்ஜித் பல்திஸ்தான், பாகிஸ்தான் மாகாணம் போல இயங்கி வருகிறது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகத்தான் சீனா 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் கோடி) செலவில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா தனது பொருளாதார வழித்தடத்தை அமைப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ஏற்கனவே இந்தியா போர்க்கொடி தூக்கியது நினைவுகூரத்தக்கது.

    இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில், நேற்று முன்தினம் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் சாகித் ககான் அப்பாசி தலைமை தாங்கினார். அந்த நாட்டின் திட்டக்குழு துணைத்தலைவர் சர்தாஜ் அஜிஸ், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்திஸ்தான் ஆகியவற்றில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி விரிவாக பேசினார். தொடர்ந்து இது குறித்து விவாதங்களும் நடந்தன.

    அதன் முடிவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும், கில்ஜித் பல்திஸ்தானுக்கும் கூடுதலான நிர்வாகம் மற்றும் நிதி அதிகாரத்தை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அவற்றுடன் இதுவரை நிர்வாகம், நிதி சீர்திருத்தங்கள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.

    இருந்தபோதிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கவுன்சில், கில்ஜித் பல்திஸ்தான் கவுன்சில், தொடர்ந்து ஆலோசனை கவுன்சில்களாக தொடர்வது என்று கூட்டத்தில் கருத்தொற்றுமை உருவாக்கப்பட்டது.

    பிராந்திய வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கில்ஜித் பல்திஸ்தான் பகுதிக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி அசன் இக்பால், ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி குர்ரம் தஸ்தகீர் கான் மற்றும் ராணுவம், சிவில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×