search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் புதிய மந்திரிசபை நாளை பதவி ஏற்கிறது - அதிபர் சிறிசேனா அறிவிப்பு
    X

    இலங்கையில் புதிய மந்திரிசபை நாளை பதவி ஏற்கிறது - அதிபர் சிறிசேனா அறிவிப்பு

    இலங்கையில் புதிய மந்திரிசபை நாளை பதவி ஏற்க உள்ளதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். #Sirisena #LankaCabinet
    கொழும்பு:

    இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஒற்றுமை அரசை அமைத்து இருந்தன. பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் புதிய கட்சி பெருவாரியான இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இதனால் இலங்கை அரசில் புயல் வீசத்தொடங்கியது. இதைத்தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா கேட்டுக்கொண்டார். ஆனால் இதற்கு பிரதமர் மறுத்துவிட்டார். இதனால் அரசில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டது.



    இந்த நிலையில் பிரதமருக்கு எதிராக ராஜபக்சே ஆதரவு பெற்ற கூட்டு எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த மாத தொடக்கத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தை முறியடித்து பிரதமர் வெற்றி பெற்றார். இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது அதிபர் சிறிசேனாவின் கட்சியை சேர்ந்த 6 மந்திரிகள் உள்ளிட்ட சில எம்.பி.க்கள் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக வாக்களித்தனர். எனவே இந்த மந்திரிகளை மந்திரிசபையில் இருந்து நீக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி அதிபரை வலியுறுத்தியது.

    அதன்படி இந்த மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களுக்கு பதிலாக பொறுப்பு மந்திரிகள் நியமிக்கப்பட்டனர்.

    இந்த பரபரப்பான சூழலில் அரசியல் சட்டம் 70-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை பாராளுமன்றத்தை அதிபர் சிறிசேனா தற்காலிகமாக முடக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக புதிய மந்திரிகளின் பட்டியல் தற்போது இறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய மந்திரிசபை நாளை பதவியேற்க இருப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்து உள்ளார். இதன் மூலம் இலங்கை அரசில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Sirisena #LankaCabinet
    Next Story
    ×