search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் 3 சகோதரர்களின் தலை துண்டிப்பு - ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெறிச்செயல்
    X

    ஆப்கானிஸ்தானில் 3 சகோதரர்களின் தலை துண்டிப்பு - ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெறிச்செயல்

    ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் கடத்தி செல்லப்பட்ட 3 சகோதரர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜலாலாபாத்:

    ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானை ஒட்டியுள்ள எல்லையோர மாகாணமான நங்கார்கரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்குள்ள சபார்கர் மாவட்டத்தை சேர்ந்த 3 சகோதரர்களை சமீபத்தில் அவர்கள் கடத்தி சென்றனர்.

    இதில் மூத்தவரான நிசார் தரேலிவால் (வயது 27) டாக்டராகவும், நயீம் (24) தடுப்பூசி விழிப்புணர்வாளராகவும், அப்துல் வகாப் (19) மருத்துவ மாணவராகவும் இருந்தனர். இவர்கள் 3 பேரையும் கடந்த 21-ந் தேதி இரவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தலை துண்டித்து கொலை செய்தனர்.

    இவர்களின் தந்தையையும் கடந்த ஆண்டு ஐ.எஸ். இயக்கத்தினர் தலை துண்டித்து கொலை செய்திருந்தனர். அவரும் மருத்துவராக பணியாற்றி வந்தார். இதைப்போல 11 விவசாயிகளையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சமீபத்தில் கடத்தி சென்றனர். பின்னர் அவர்களில் இருவரை மட்டும் அவர்கள் விடுவித்தனர்.

    இந்த 2 சம்பவங்களுக்கான காரணம் குறித்து எந்த தகவலையும் ஐ.எஸ். இயக்கத்தினர் வெளியிடவில்லை. இந்த சம்பவங்களால் நங்கார்கர் மாகாணத்தில் அதிர்ச்சியும், பதற்றமும் நிலவி வருகிறது. 
    Next Story
    ×