search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியா மீது ஏவப்படும் அமெரிக்க ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவோம் - ரஷிய தூதர் ஆவேசம்
    X

    சிரியா மீது ஏவப்படும் அமெரிக்க ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவோம் - ரஷிய தூதர் ஆவேசம்

    சிரியா நாட்டின் மீது அமெரிக்கா வீசும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவோம் என லெபனான் நாட்டுக்கான ரஷிய தூதர் எச்சரித்துள்ளார். #Syria
    பெய்ரூட்:

    சிரியாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் இதுவரை 1.2 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். சுமார் 61 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 60 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.

    2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை அங்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.

    அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசையும், கிளர்ச்சியாளர்கள் மீதான அரசுப் படைகளின் தாக்குதலையும் ஆதரித்து வருகின்றன.

    கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் கிழக்கு கவுட்டா பகுதியை மீட்பதற்காக சிரியா படைகள் உச்சகட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அங்குள்ள பொதுமக்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிருக்கு பயந்து வெளியேறி விட்டனர்.

    கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் சமீபத்தில் நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்தது.

    இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நேற்று அவசரமாக கூடியது. சிரியா மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தால் தோற்கடித்தது. இதேபோல், ரஷியா கொண்டுவந்த ஒரு தீர்மானமும் தோல்வியில் முடிந்தது.

    சிரியா விவகாரத்தில் எதிர்காலத்தில் கையாள தீட்டிவரும் திட்டங்களை எல்லாம் அமெரிக்கா கைவிட வேண்டும் என ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் இந்த கூட்டத்தின்போது எச்சரித்தார்.

    இந்நிலையில், சிரியா நாட்டின் மீது அமெரிக்கா வீசும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவோம் என லெபனான் நாட்டுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் ஜாசிப்கின் எச்சரித்துள்ளார்.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி முன்னர் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டிய அலெக்சாண்டர் ஜாசிப்கின், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த ஏவுகணைகளையும், அது எங்கிருந்து ஏவப்பட்டதோ, அந்த பகுதியையும் ரஷியா தாக்கி அழிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். #Syria 
    Next Story
    ×