search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அரசியல் கட்சியை தடை செய்யும் அமெரிக்காவுக்கு இந்தியா வரவேற்பு
    X

    பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அரசியல் கட்சியை தடை செய்யும் அமெரிக்காவுக்கு இந்தியா வரவேற்பு

    பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ஆரம்பித்துள்ள மில்லி முஸ்லிம் லீக் கட்சியை பயங்கரவாத துணை அமைப்பாக பட்டியலிட்டுள்ள அமெரிக்காவின் நடவடிக்கையை இந்தியா வரவேற்றுள்ளது.
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் நாட்டில் இயங்கி வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.

    இதுதவிர, இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத், ஜமாஅத் உத் தாவா என்னும் அமைப்புக்கு தலைமை தாங்குவதுடன் ’மில்லி முஸ்லிம் லீக்’ என்னும் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளான். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் தீர்மானித்துள்ளான்.

    இந்நிலையில், மில்லி முஸ்லிம் லீக் என்னும் அரசியல் கட்சியும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஒருபிரிவுதான் என்று பிரகடனப்படுத்தி தடை விதிக்க அமெரிக்க அரசு தீர்மானித்தது. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவாக மில்லி முஸ்லிம் லீக் கட்சி மற்றும் பாகிஸ்தானில் இயங்கி வரும் தெஹ்ரீக்-இ-ஆஸாதி ஜம்மு காஷ்மீர் என்னும் அமைப்பையும் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைத்துள்ளதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது.

    அமெரிக்காவின் இந்த முடிவுக்கு இந்திய அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர், ’மில்லி முஸ்லிம் லீக் கட்சியை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உள்பிரிவு தான் என்னும் அறிவிப்பின் மூலம் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு எவ்வித உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்னும் இந்தியாவின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார். #tamilnews
    Next Story
    ×