search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாக். ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய அதிகாரிகள் பங்கேற்பு
    X

    பாக். ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய அதிகாரிகள் பங்கேற்பு

    பாகிஸ்தான் தின ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய ராணுவ உயர் அதிகாரி சஞ்சய் விஷ்வாஸ்ராவ் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் பங்கேற்று பார்வையிட்டனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான், 1956-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி, உலகின் முதல் இஸ்லாமிய குடியரசு ஆனது. அதைக் கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் அந்த நாளில், ‘பாகிஸ்தான் தினம்’ என்ற பெயரில் ராணுவ அணிவகுப்பு நடத்துவது வழக்கம். இதில் இந்திய தூதரக அதிகாரிகள் பங்கேற்பது இல்லை.

    ஆனால் இந்திய, பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ள நிலையிலும், நேற்று முன்தினம் நடந்த கொண்டாட்டத்துக்கு, அங்கு உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ராணுவ அதிகாரிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவம் அழைப்பு விடுத்தது.

    இந்தியாவுக்கு சமாதான செய்தி விடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதுபற்றி அவர் கூறும்போது, “இந்திய ராணுவ பிரதிநிதிகளை, பாகிஸ்தான் தின ராணுவ அணிவகுப்பை பார்வையிட அழைப்பு விடுத்ததின் பின்னணி, பாகிஸ்தான் அமைதியைத்தான் விரும்புகிறது என்ற தகவலை தெரிவிக்கத்தான்” என்று குறிப்பிட்டார்.

    பாகிஸ்தான் தின ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய ராணுவ உயர் அதிகாரி சஞ்சய் விஷ்வாஸ்ராவ் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் பங்கேற்று பார்வையிட்டனர்.

    காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இரு தரப்பினரிடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகிற நிலையில், பாகிஸ்தான் தின ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில், இந்திய உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து, அவர்கள் பங்கேற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

    இந்த தகவல்களை பாகிஸ்தானில் இருந்து வெளிவருகிற ‘தி எக்ஸ்பிரஸ் டிரிபியுன்’ பத்திரிகை வெளியிட்டு உள்ளது. 
    Next Story
    ×