search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொலைத்தொடர்புத் துறை ஊழல் - இஸ்ரேல் பிரதமர் வீட்டில் போலீஸ் நுழைந்தது
    X

    தொலைத்தொடர்புத் துறை ஊழல் - இஸ்ரேல் பிரதமர் வீட்டில் போலீஸ் நுழைந்தது

    இஸ்ரேல் நாட்டில் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வீட்டுக்குள் இன்று போலீசார் நுழைந்து விசாரணை நடத்தினர்.
    டெல் அவிவ்:

    இஸ்ரேல் நாட்டில் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான பெசெக் டெலிகாம் கம்பெனிக்கு சலுகை அளித்ததன் மூலம் லஞ்சம் பெற்றதான குற்றச்சாட்டில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அவரது மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள பிரபலங்களும், நண்பர்களும் சிக்கியுள்ளனர்.

    இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா? என கடந்த 14 மாதங்களாக போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில், தன் மீதான புகாரை நேதன்யாகு மறுத்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திடீரென டெல் அவிவ் நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டனர்.

    நேதன்யாகுவிற்கு எதிராக குரல்களை எழுப்பிய அவர்கள், அவரை குற்ற விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

    இந்நிலையில், விசாரணையின் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் கூறினர். விசாரணையின் அறிக்கையை அரசு தலைமை வழக்கறிஞரிடம் வழங்கிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தலைமை போலீஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.

    இதில் வழக்கு எண் 1000 எனப்படும் வழக்கில் நேதன்யாகுவின் மனைவியின் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில சலுகைக்களுக்காக ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் அர்னான் மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிடமிருந்து நேதன்யாகுவும் அவரது மனைவி சாராவும் சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை லஞ்சமாக பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


    மனைவி சாராவுடன் நேதன்யாகு

    இதனையடுத்து, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வீட்டுக்குள் இன்று போலீசார் நுழைந்து விசாரணை நடத்தினர். அவரது மனைவி சாராவிடம் வேறொரு இடத்தில் விசாரணை நடைபெற்றது என இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இன்று நடைபெற்ற விசாரணை வழக்கு எண் 4000 தொடர்பானது என்றும் கடந்த ஆண்டுவரை தொலைத்தொடர்பு துறை மந்திரி பதவியை வைத்திருந்த பெஞ்சமின் நேதன்யாகுவிடம் இந்த ஊழல் தொடர்பாக போலீசார் நேரடியாக விசாரணை நடத்துவது இதுவே முதல்முறை என்றும் அந்த செய்திகள் குறிப்பிட்டுகின்றன.

    இஸ்ரேல் நாட்டின் சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ளும் பிரதமர் பதவி விலக வேண்டியது இல்லை. தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவி பறிபோகும். எனினும், பெஞ்சமின் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால், அவர் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். #tamilnews

    Next Story
    ×