search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடா? - ரஷியா திட்டவட்ட மறுப்பு
    X

    அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடா? - ரஷியா திட்டவட்ட மறுப்பு

    அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டதாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டியுள்ளதை ரஷிய அரசு இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. #uselection #russia
    மாஸ்கோ: 

    அமெரிக்க பாராளுமன்றம் மற்றும் அதிபர் பதவிக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்க பாராளுமன்ற புலனாய்வு கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது.

    குடியரசு கட்சி வேட்பாளராக அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனாட் டிரம்ப் வெற்றிபெற விளாடிமிர் புதின் உத்தரவின் பேரில் ரஷிய நாட்டின் உளவுத்துறை இணையதள ஊடுருவலில் ஈடுபட்டு, ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி, நினைத்ததை சாதித்து விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

    ஆளும் ஜனநாயக கட்சியின் இணையதளம் மற்றும் கம்ப்யூட்டர்களில் ஊடுருவிய ரஷிய ‘ஹேக்கர்கள்’ அவற்றில் இருந்து முக்கிய தகவல்களை சேகரித்து அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற உதவியதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்க உள்நாட்டு உளவுத்துறை குறிப்பிட்டிருந்தது.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையில் விரிவான விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக அமெரிக்க பாராளுமன்ற புலனாய்வு கமிட்டி கடந்த ஆண்டில் அறிவித்தது.

    இந்த விசாரணையின்போது அமெரிக்கர்கள் என்ற போலி அடையாளத்தை ஏற்படுத்திகொண்டு சிலர் இணைதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிரான பொய் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த குழுவினர் டொனால்ட் டிரம்ப்பின் பிரசாரத்துக்கு பொறுப்பேற்றிருந்த தனிநபர்களுடன் தொடர்பு வைத்திருந்த தகவலும் தெரியவந்தது. இந்த தலையீட்டுக்கு டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பிரசார இயக்கத் தலைவரும், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான கோரே ஆர். லேவென்டோஸ்க்கி உள்பட 4 அமெரிக்கர்கள் மீது தேர்தலை சீர்குலைக்க முயன்றதாக முல்லர் தலைமையிலான விசாரணை ஆணையம் குற்றச்சாட்டுகளை முன்னர் பதிவு செய்திருந்தது.

    இந்நிலையில், ரஷியாவை சேர்ந்த பிரபல இணையதள ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் மற்றும் ரஷியாவை சேர்ந்த 13 தனிநபர்கள் மீது 17-2-2018 அன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டின் துவக்க காலத்தில் இருந்து அமெரிக்க அரசியலில் இணையதளங்களின் வாயிலாக தலையீடு செய்து, 2016-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றம் மற்றும் அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக தீவிரமான மறைமுக பிரசாரங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டதாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டியுள்ளதை ரஷிய அரசு இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    இதுதொடர்பாக, ரஷிய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இன்று கூறியதாவது:-

    அமெரிக்க தேர்தல்களில் தலையீடு செய்ததாக ரஷிய அரசின்மீது குற்றம்சாட்டி வந்த அமெரிக்க அரசு ரஷியாவை சேர்ந்த தனிநபர்களின்மீது தற்போது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளதை வைத்தே அவர்களிடம் எங்களுக்கு எதிரான அடிப்படை ஆதாரங்கள் ஏதுமில்லை என்பது தெளிவாகிறது.

    இதில் ரஷிய அரசின் தலையீடு ஏதுமில்லை, இருக்கவும் முடியாது. பிறநாடுகளின் விவகாரத்தில் ரஷியா தலையிட்டதில்லை. தலயிடுவதும் இல்லை. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது மட்டுமல்ல, நியாயமற்றதும்கூட.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #uselection #russia
    Next Story
    ×