
கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சபரிமலை சீராய்வு மனு தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை கேட்டுள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் பலர் சட்ட நுணுக்கங்களை தெரிவித்துள்ளனர். அதன்படி இப்போதைக்கு சபரிமலை கோவிலுக்கு இளம்பெண்கள் வருவதை அரசு ஊக்குவிக்காது. நாளை நடை திறக்க உள்ள நிலையில் பெண்கள் கோவிலுக்கு வரவேண்டும் என்று விரும்புவதை அரசு ஆதரிக்காது.
சபரிமலை கோவிலில் தற்போதுள்ள நிலையே தொடரும். 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலைக்கு வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம். நீதிமன்ற அனுமதி பெற்று வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும்.

பெண் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய், சபரிமலை வருவதாக வெளியான தகவல் குறித்து கேட்டபோது, சபரிமலை கோவில் வளாகம் ஆர்வலர்களுக்கான இடம் அல்ல என்றார் மந்திரி சுரேந்திரன். கோவிலுக்கு வரவேண்டும் என யாராவது நினைத்தால், நீதிமன்றம் சென்று உரிய உத்தரவுகளுடன் வந்தால் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.