
இந்திய அணியில் லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா மற்றும் முரளி விஜய் ஆகிய தொடக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்களில் இருவருக்குத்தான் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும். இந்நிலையில் லோகேஷ் ராகுல் மற்றும் பிரித்வி ஷா ஆகியோரைத்தான் தொடர் முழுவதும் தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறக்க வேண்டும்என்று முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘நான் கேப்டனாக இருந்தால் கேஎல் ராகுல் மற்றும பிரித்வி ஷா ஆகியோருக்கு தொடர் முழுவதும் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்பு கொடுப்பேன். ஏனென்றால், முரளி விஜய் போதுமான அளவு வாய்ப்பு பெற்றுவிட்டார். தற்போது அவர் மீண்டும் வாய்ப்பு பெற காத்திருக்க வேண்டும்.

பிரித்வி ஷா அவரது திறமையை நிரூபித்திருக்கிறார். அறிமுக டெஸ்டில் சதமும், அடுத்த போட்டியில் 60 ரன்களுக்கு மேலும் அடித்துள்ளார். அதனால் அவருக்கு எதிர்காலம் இருக்கிறது. அவரால் அடுத்த 10 முதல் 12 வருடங்கள் வரை விளையாட முடியும். அதனால் அவருக்கு தொடர் முழுவதும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். ஆஸ்திரேலியா தொடரில் முரளி விஜய் களம் இறங்குவார் என்று நான் பார்க்கவில்லை’’ என்றார்.