search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணி மீண்டும் ஒத்திவைப்பு
    X

    கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணி மீண்டும் ஒத்திவைப்பு

    கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற இருந்த 5வது கட்ட அகழாய்வு பணி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ளது கீழடியில் பண்டைய தமிழர் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிய கடந்த 2015ம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    முதற்கட்டமாக நடந்த இந்த அகழாய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. இதனையடுத்து 2016ம் ஆண்டு 2வது கட்டமாகவும், 2017ம் ஆண்டு 3வது கட்டமாகவும் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்றது. இதில் கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என சுமார் 1,600க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. தொடர்ந்து 4வது முறையும் ஆய்வு நடந்தது.



    முதல் 4 ஆய்வுகளில் கண்டெடுத்த 14 ஆயிரத்து 500 பொருட்களையும் காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 1 ஏக்கரில் அகழ்வைப்பகம் ஏற்படுத்த அரசு ரூ.1 கோடி ஒதுக்கி உள்ளது. மத்திய அரசிடமும் ரூ.2 கோடி கேட்கப்பட்டு உள்ளது.

    ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள ரூ.57 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 5ம் கட்டப்பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தல், மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகிய காரணங்களால் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஜூன் முதல் வாரம் அகழாய்வு பணி தொடங்கும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதன்படி அகழாய்வு பணிகள் நடப்பதற்காக அந்த பகுதி சுத்தம் செய்யப்பட்டது. இன்று அகழாய்வு பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இதற்கு தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி துறை அனுமதி வழங்கவில்லை. இதனால் 5வது கட்ட அகழாய்வு பணி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப்பணி நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக தொல்லியில் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் நாளை ஆய்வு செய்ய உள்ளார். 
    Next Story
    ×