search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரூரில் மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி
    X

    அரூரில் மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி

    அரூரில் மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரூர்:

    தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது60). இவரது மகன் கவுதம் (26). இவர் அரூர் பஸ் நிலையம் பின்புறம் பிளக்ஸ் பேனர் பிரிண்டிங் கடை சொந்தமாக வைத்து நடத்தி வந்தார்.

    கடந்த சில நாட்களாக அரூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக கவுதம் வீட்டில் மின்வயர் துண்டித்து அறுந்து துணி காய வைக்கும் கம்பியின் மீது கிடந்தது.

    இதனை கவனிக்காத கவுதம் நேற்று இரவு பாத்ரூமுக்கு செல்வதற்காக லைட் சுவிட்சை போட வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கவுதம் துணி காய வைக்கும் கம்பியை கையில் பிடித்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து வலியால் அலறினார்.

    கவுதமின் அலறல் சத்தம் கேட்டு அவரது தந்தை அங்கு ஓடி வந்து தனது மகனை காப்பாற்ற முயற்சித்தார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தந்தையும், மகனும் அதே இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    சவுந்தரராஜன் வீட்டில் யாரும் இல்லாததால் இன்று காலை 2 பேரும் பிணமாக கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் உறவினர்களும், அரூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    உடனே தகவலறிந்து சவுந்தரராஜின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சவுந்தரராஜின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தற்போது மின்சாரம் தாக்கி சவுந்தரராஜூம், அவரது மகன் கவுதமும் இறந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×