search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே தலையில் கல்லைபோட்டு மகளை கொன்ற தாய்
    X

    திண்டுக்கல் அருகே தலையில் கல்லைபோட்டு மகளை கொன்ற தாய்

    திண்டுக்கல் அருகே தலையில் கல்லைபோட்டு மகளை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சின்னாளபட்டி:

    திருப்பூரை சேர்ந்த ராஜசேகர் மனைவி மணிமேகலை (வயது30). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். ராஜசேகர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    அதன்பிறகு மணிமேகலை தனது 3 குழந்தைகைளுடன் திருப்பூரில் தனது தாய் வீட்டில் தங்கி பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். மணிமேகலையின் பெரியம்மா லட்சுமி திண்டுக்கல் அருகில் உள்ள சின்னாளபட்டி கருணாநிதி காலனியில் வசித்து வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மணிமேகலை சின்னாளபட்டிக்கு வந்தார்.

    வீட்டிற்குள் பெரியம்மா லட்சுமி, அவரது கணவர் ரத்தினம் மற்றும் மணிமேகலையின் 3 குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். மணிமேகலை வீட்டு திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தார்.

    திடீரென அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்குள் எழுந்து வந்த மணிமேகலை தனது 2-வது மகள் யாழினி (9)யை தூக்கி கொஞ்சினார். பின்னர் சிறிது நேரத்தில் அருகில் இருந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டார். சத்தம்கேட்டு அருகில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் விழித்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் யாழினி இறந்து கிடந்தார். இது குறித்து சின்னாளபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மணிமேகலை குறித்து அவர்களது வீட்டில் விசாரித்தபோது அவர் அடிக்கடி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருப்பார் என கூறி உள்ளனர். ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி ஒரு கம்பெனியில் வேலை பார்க்க முடியும் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர்.

    கள்ளத்தொடர்பு காரணமாக மகளை கொலை செய்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளையே தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×