search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாழடைந்த கிணற்றை தூர்வார சென்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி
    X

    பாழடைந்த கிணற்றை தூர்வார சென்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

    பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் பாழடைந்த கிணற்றை தூர்வார முயன்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டை திருவள்ளுவர் நகர் சுபாஷ் சந்திரபோஸ் முதல் தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன்(வயது 60). இவரது வீட்டில் உள்ள கிணறு, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பாழடைந்த நிலையில் உள்ளது.

    தற்போது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் பாழடைந்த அந்த கிணற்றை தூர்வார முடிவு செய்தார். அதன்படி கண்ணப்பனின் மகன் சந்தோஷ்(30), அவரது நண்பர்கள் அன்பழகன் (32), காளிதாஸ்(34) ஆகியோர் பாழடைந்த கிணற்றை தூர்வார முயன்றனர்.

    இதற்காக சந்தோஷ், முதலில் கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது கிணற்றில் இருந்த விஷவாயு தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். இதைகண்ட அன்பழகன், காளிதாஸ் ஆகியோர் சந்தோசை மீட்க கிணற்றில் இறங்கினர். அவர்களையும் விஷவாயு தாக்கியதால் மயங்கி விழுந்தனர்.

    இவர்களது அலறல் சத்தம்கேட்டு அங்கிருந்த சேகர்(34), ராஜு(35), கோவிந்தசாமி(34) ஆகியோர் ஓடிவந்து கிணற்றில் விழுந்த 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களையும் விஷவாயு தாக்கியது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் துரைப்பாக்கம் போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து, கிணற்றில் விஷவாயுவை போக்க ‘ஸ்பிரே’ அடித்தனர். பின்னர் உயிர்பாதுகாப்பு கவசம் அணிந்தபடி கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், அங்கு மயங்கி கிடந்த 6 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    ஆனால் அதற்குள் விஷவாயு தாக்கியதில் சந்தோஷ், அன்பழகன், காளிதாஸ் ஆகிய 3 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். சேகர், ராஜு, கோவிந்தசாமி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுபற்றி துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×