search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுகவினர் ஜூன் முதல் வாரம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்- ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை
    X

    அதிமுகவினர் ஜூன் முதல் வாரம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்- ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை

    பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கி அ.தி.மு.க.வினர் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் பல கோடி வாக்காளர்கள் தங்கள் பொன்னான வாக்குகளை வழங்கி இருக்கின்றனர்.

    குறிப்பாக, சோளிங்கர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சூலூர், நிலக்கோட்டை, மானாமதுரை, சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம் ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகளில், வாக்காளப் பெருமக்கள் அளித்த மகத்தான வெற்றியின் காரணமாகவே, அம்மாவின் அமைத்த நல்லரசு நிலை பெற்றிருக்கிறது.

    அதே போன்று, பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க. குரல் ஒலிப்பதை உறுதி செய்திடும் வகையில், தேனி பாராளுமன்ற மக்களவை தொகுதியில் கழக வேட்பாளர் பெற்றிருக்கும் வெற்றி மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக அமைகிறது.

    தேனி மாவட்ட மக்கள் கழகத்திற்கு அளித்திருக்கும் வெற்றி மாலை, நம் இயக்கத்திற்கு சூட்டப்பட்ட நன்றி மாலையாக அமைந்து, மத்தியில் அமைந்திருக்கும் புதிய அரசை ஆதரித்து வழிமொழியும் வாய்ப்பையும் நமக்கு வழங்கியிருப்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

    வாக்காளப் பெருமக்கள், கழகத்திற்கு துரோகம் செய்தோரை புறந்தள்ளி, உண்மையான மக்கள் இயக்கம் அ.தி.மு.க. தான் என்பதையும், மக்கள் மனதில் நிலைபெற்றிருப்பது “இரட்டை இலை” சின்னம் தான் என்பதையும் தங்கள் வாக்குகள் மூலம் உறுதி செய்திருக்கின்றார்கள்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களையும்; சட்டமன்ற இடைத்தேர்தலில், தமிழக அரசையும், அ.தி.மு.க.வையும் தங்கள் பொன்னான வாக்குகளால் கட்டிக் காத்திருக்கும் வாக்காளப் பெருமக்களையும் நேரடியாக சந்தித்து நன்றி கூற வேண்டியது, கழகத்தினரின் இன்றியமையாத கடமையாகும்.

    எனவே, தமிழகம் முழுவதும் ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கி வாக்காளப் பெருமக்களுக்கு, கழக நிர்வாகிகளும், வேட்பாளர்களும், நேரடி சந்திப்புகள் வழியாகவும், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் நன்றி தெரிவித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    நமக்கு வாக்களித்தோர் மட்டுமல்லாமல், மற்றவர்களும் மனம் மகிழும் வண்ணம், கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இன்னும் சிறப்புடன் மக்கள் பணியாற்றி, அனைவரது இதயங்களையும் வென்றெடுக்க நம் தொண்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×