search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீஞ்சூர் அருகே கழுத்தை அறுத்து பெண் படுகொலை
    X

    மீஞ்சூர் அருகே கழுத்தை அறுத்து பெண் படுகொலை

    மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரை சேர்ந்தவர் சிவகாமி (வயது 35). கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவர் கடந்த 3 மாதத்துக்கு முன்பு மீஞ்சூரை அடுத்த வாயலூரில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார்.

    கடந்த 3 நாட்களாக அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இந்த நிலையில் சிவகாமி தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் சிவகாமி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    சிவகாமியின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டு அவரது கழுத்து பாதி அளவு அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் கை, உடலிலும் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.

    அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. வீட்டின் கதவு திறந்து கிடந்ததால் சிவகாமியின் உடலை நாய்கள் கடித்து குதறி இருந்தன.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரிய வில்லை. சிவகாமி அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை.

    எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையுண்ட சிவகாமி காட்டூர் காலனியில் உள்ள சத்துணவு கூடத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு 12 வயதில் மகன் உள்ளான். அவன் வாயலூர் கொக்கு மேடு பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி உள்ளான்.

    வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×