search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தம்பியுடன் கள்ளக்காதல்- மனைவியை வெட்டி கொன்ற கணவர்
    X

    தம்பியுடன் கள்ளக்காதல்- மனைவியை வெட்டி கொன்ற கணவர்

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கள்ளக்காதல் காரணமாக மனைவியை கட்டிட மேஸ்திரி வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த ஐகுந்தம் அருகே உள்ள வெப்பாளம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 31).

    கட்டிட மேஸ்திரியான இவருக்கு திருமணமாகி கஸ்தூரி (28) என்ற மனைவியும், அரசு (8), தமிழ்(5) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    கோவிந்தராஜின் பெற்றோர்கள் கிட்டம் பட்டியில் வசித்து வருகின்றனர். அவர்களுடன் கோவிந்தராஜின் தம்பி சின்னசாமியும் வசித்து வருகிறார்.

    கோவிந்தராஜின் மனைவி கஸ்தூரிக்கும், அவரது கொழுந்தனுமான சின்னசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது தெரியவந்தது.

    இதனை கண்ட கோவிந்தராஜ் அவரது மனைவி கஸ்தூரியை பலமுறை கண்டித்ததாக தெரியவந்தது. ஆனாலும், அதனை கண்டு கொள்ளாத கஸ்தூரி மீண்டும் சின்னசாமியுடம் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக நேற்று இரவு மீண்டும் கோவிந்த ராஜிக்கும், கஸ்தூரிக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கஸ்தூரியை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது கஸ்தூரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கோவிந்தராஜ் போலீசாரிடம் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    அப்போது அவர் போலீசாரிடம், தனது மனைவி கஸ்தூரிக்கும், தம்பி சின்னசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து நான் பலமுறை எனது மனைவியை கண்டித்தேன். ஆனால் அவர் எதையும் கேட்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் எங்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கஸ்தூரியை சரமாரியாக வெட்டினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    எனது குடும்பத்தை காப்பற்ற எனது தம்பி சின்னசாமி இருப்பான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவனால் எனது குடும்பம் சிதைந்து விட்டது. தற்போது நான் கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்றால் தவித்து நிற்கும் எனது குழந்தைகளை இனி யார் காப்பாற்றுவார்கள்? என்று கண்ணீர் மல்க கூறினார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்காதல் காரணமாக மனைவியை கட்டிட மேஸ்திரி வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×