search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே போலீஸ் குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை
    X

    வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே போலீஸ் குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை

    வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சண்முகம். சத்துவாச்சாரி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதனை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் போலீஸ் குடியிருப்புக்குள் புகுந்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    நேற்று இரவு வெளியூர் சென்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், அவரது மனைவி வேலூர் வந்தனர். வீட்டுக்கு வந்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன.

    இதனைக்கண்டதும் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி மயக்கம் போட்டு கீழே விழுந்தார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

    போலீஸ் குடியிருப்பில் நடந்த இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்காரர்கள் வீட்டுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கொள்ளை நடந்த போலீஸ் குடியிருப்பில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதனால் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    பொதுமக்கள் வரும் இடங்கள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் 3-வது கண்ணாக விளங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் போலீஸ் குடியிருப்புகளில் கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் போலீசார் குடும்பத்தினர் பாதுகாப்பே கேள்விக்குறியாகி உள்ளது.

    அனைத்து போலீஸ் குடியிருப்புகளிலும் கேமராக்கள் பொருத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×