search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அன்புச்செல்வனை சந்தித்து கல்லூரி மாணவி திலகவதியின் பெற்றோர்- பாமகவினர் மனு கொடுத்த போது எடுத்த படம்.
    X
    கலெக்டர் அன்புச்செல்வனை சந்தித்து கல்லூரி மாணவி திலகவதியின் பெற்றோர்- பாமகவினர் மனு கொடுத்த போது எடுத்த படம்.

    கல்லூரி மாணவியை குத்திக்கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்- பெற்றோர் கண்ணீர் மல்க மனு

    விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவியை குத்திக்கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கடலூர் கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 49), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கொளஞ்சி (43). இவர்களது மகள் திலகவதி (19).

    இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனிமையில் இருந்த திலகவதியை பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் (19) என்ற வாலிபர் சரமாரியாக குத்தி கொன்றார்.

    இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்ற ஆகாசை கைது செய்தனர். பின்னர் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கல்லூரி மாணவி திலகவதி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று மாலை கொண்டு சென்றனர்.

    அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும், மாணவியின் உடலை உறவினர்களிடம் கொடுத்தனர். ஆனால், அவர்கள் திலகவதியின் உடலை வாங்க மறுத்து விட்டனர்.

    கலெக்டர் அலுவலகம் வந்த கல்லூரி மாணவி திலகவதியின் தாய் கதறி அழுத காட்சி.


    மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு அதன் பின்னர் உடலை வாங்கி கொள்கிறோம் என்று, டாக்டர்களிடம் கூறினார்கள்.

    மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மாணவி திலகவதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர்கள் தாமரைக்கண்ணன், அசோக்குமார், வக்கீல் தமிழரசன் ஆகியோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று காலை 11 மணிக்கு வந்தனர்.

    பின்பு அங்கிருந்த கலெக்டர் அன்புச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோரிடம் மாணவி திலகவதியின் பெற்றோர் கண்ணீர் மல்க ஒரு மனுவை கொடுத்தனர்.

    அதன் பின்னர் அவர்கள் கூறும்போது, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்கள். மேலும் மிரட்டலும் விடுக்கிறார்கள். குற்றவாளியான ஆகாசுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் அன்புச்செல்வன் கூறும்போது, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வேலை தொடர்பாக அரசுக்கு அறிவுறுத்தப்படும் என்றார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறும்போது, இந்த வழக்கு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    மேலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை உடனடியாக பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    அதனை தொடர்ந்து மகளின் உடலை பெற்றுக் கொள்வதாக கூறி விட்டு சென்றனர்.
    Next Story
    ×