search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட வாலிபர் ஆகாஷ்
    X
    கைது செய்யப்பட்ட வாலிபர் ஆகாஷ்

    விருத்தாசலம் மாணவி கொலை- கைதான வாலிபர் கொடுத்த வாக்குமூலம் வீடியோ வெளியானதால் பரபரப்பு

    விருத்தாசலத்தில் மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கைதான வாலிபர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வீடியோவாக வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் திலகவதி (வயது 19).

    இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனிமையில் இருந்த திலகவதியை பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் (19) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டி கொன்றார்.

    இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்ற ஆகாசை கைது செய்தனர்.

    இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி திலகவதியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    கைது செய்யப்பட்ட வாலிபர் ஆகாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கருவேப்பிலங்குறிச்சியில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அதனை தொடர்ந்து பா.ம.க.வினர் மற்றும் மாணவியின் உறவினர்கள் மற்றும் கருவேப்பிலங்குறிச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்தியன், இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டனர்.

    மாணவி திலகவதி கொலை செய்யப்பட்டதை கண்டித்து கருவேப்பிலங்குறிச்சியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

    இதற்கிடையே திலகவதியை கொலை செய்தது தொடர்பாக ஆகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீஸ்கரர் ஒருவர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் வாங்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    3.09 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் திலகவதியை பற்றியும், அவரை எப்படி தெரியும், கொலை செய்தது எப்படி என்பது குறித்தும் பல்வேறு கேள்விகளை போலீஸ்காரர் ஒருவர் கேட்பதும், அதற்கு ஆகாஷ் பதில் அளிக்கும் காட்சியும் அதில் இடம் பெற்று இருக்கிறது.

    போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் ரகசியமாக வாங்கப்பட்ட வாக்குமூலம் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருப்பது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று மாலை கொண்டு சென்றனர்.

    அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும், மாணவியின் உடலை உறவினர்களிடம் கொடுத்தனர். ஆனால், அவர்கள் திலகவதியின் உடலை வாங்க மறுத்து விட்டனர்.

    மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு அதன் பின்னர் உடலை வாங்கி கொள்கிறோம் என்று, டாக்டர்களிடம் கூறினார்கள்.

    மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவியின் சொந்த ஊரான கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×