search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும்- ராஜேந்திரபாலாஜி பேச்சு
    X

    மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும்- ராஜேந்திரபாலாஜி பேச்சு

    மக்கள் திட்டங்களை தடுக்க நினைக்கும் தி.மு.க.வுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்று ஒட்டப்பிடாரம் பிரசாரத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார். #rajendrabalaji #dmk #admk

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் போட்டியிடுகிறார். மோகனுக்கு ஆதரவாக காயல்ஊரணி,புதியம் புத்தூரில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர்ராஜூ இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

    அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மோகன் சாதாரண தொண்டர் ஆவார். தி.மு.க.வில் ஒரு சாதாரண தொண்டனை வேட்பாளராக அறிவிக்க மாட்டார்கள். ஓட்டப் பிடாரம் தொகுதி என்றைக்கும் அ.தி.மு.க.வின் கோட்டையாகும்.

    பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார். குறிப்பாக தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்து அன்னை தெரசாவால் பாராட்டும் பெற்றார். பொங்கல் பரிசு ரூ.1000 தமிழகம் முழுவதும் 2 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போல் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 60 லட்சம் மக்களுக்கு ரூ.2000 உதவித்தொகை வழங்கும் திட்டம் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் கொண்டு வந்தார்.

    அந்த திட்டத்தை எதிர்த்து தி.மு.க.வினர் உயர்நீதிமன்றம் சென்றனர். உயர்நீதிமன்றமோ அதற்கு தடைவிதிக்க மறுத்தது. அதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் வழங்கக் கூடாது என்று புகார் கூறியுள்ளனர். தற்போது தேர்தல் காலம் முடிந்தவுடன் நிச்சயம் உங்களுக்கு வழங்கப்படும். மக்களாகிய உங்களுக்கு அம்மா அரசு வழங்கும் திட்டங்களை தடுக்க நினைக்கும் தி.மு.க.வுக்கு சரியான பாடத்தை புகட்டுங்கள். அது மட்டுமல்லாது நம்மை எதிர்க்கும் துரோகியான அ.ம.மு.க.விற்கும் சரியான பாடத்தை புகட்டி இரட்டை இலையை அமோக வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #rajendrabalaji #dmk #admk

    Next Story
    ×